முன்னாள் பாஜக தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி மரணம்
சென்னை:
பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜனா. கிருஷ்ணமூர்த்தி இன்று சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 79.
1928ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி. சட்டம் பயின்ற ஜனா, வக்கீலாக பணியாற்றினார். பின்னர் ஜன சங்கத்தில் இணைந்து அரசியலில் நுழைந்தார். அதன் பின்னர் ஜனதாக் கட்சி மற்றும் பாஜகவில் தீவிரமாக செயல்பட்டார்.
2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக செயல்பட்டார்.
பாஜக தலைவராகவும் ஜனா. கிருஷ்ணமூர்த்தி செயல்பட்டுள்ளார். காமராஜருக்குப் பிறகு தேசியக் கட்சி ஒன்றின் தலைவராக பதவி வகித்த ஒரே தமிழர் ஜனா கிருஷ்ணமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழரும் அவர்தான்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை இழந்த பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார் ஜனா. கடந்த 2 மாதங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயல் இழந்தன. இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நெல்லை வந்த பாஜக மூத்த தலைவர் அத்வானி, சென்னை வந்து ஜனாவைப் பார்த்தார். இந்த நிலையில் இன்று காலை ஜனா கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
அவருக்கு மனைவி, 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். ஜனா. கிருஷ்ணமூர்த்தியின் இறுதிச் சடங்கு நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதில் பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.