நாடார்களை கேலியாகப் பேசுவதா? திமுக நிர்வாகிக்கு நாடார் பேரவை எச்சரிக்கை!
கரூர்:
நாடார் சமூகத்தினரை இழிவுபடுத்திப் பேசிய திமுக நெசவாளர் பிரிவு செயலாளர் பரமத்தி சண்முகம் மன்னிப்பு கேட்காவிட்டால், அவருக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தப்படும் என தமிழக நாடார் பேரவை எச்சரித்துள்ளது.
பாஜகவைக் கண்டித்து சமீபத்தில் கரூரில் திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் பரமத்தி சண்முகம் சரத்குமாரை கண்டித்து பேசியபோது வைகோ, விஜயகாந்த் தான் விவரம் புரியாமல் பேசுகின்றனர் என்றால் இந்த சரத்குமாருக்கு என்ன வந்தது.
முன்பு நாடார்களை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் விட மறுத்த போது அவர்களுக்கு விடுதலை வாங்கித் தர பெரியார், அண்ணா, கலைஞர் எல்லாம் எப்படி கஷ்டப்பட்டார்கள் என சரத்குமார் அவர் அம்மா, அப்பாவைக் கேட்டால் தெரியும் என்று பேசினார்.
இப் பேச்சு நாடார்கள் மனதை புண்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள நாடார் பேரவை பரமத்தி சண்முகத்திற்கு எதிராக கண்டன போஸ்டர்களை கரூர் மாவட்டம் முழுவதும் ஒட்டியுள்ளனர். உடனே அவர் மன்னிப்பு கேக்காவிட்டால் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதனால் கரூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.