பாஜக கூட்டணிக்கு நேரம் வரவில்லை: ஜெ.
ஊட்டி:
பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோநாட்டில் உள்ள தனது எஸ்டேட்டில் தங்கியுள்ள ஜெயலலிதா, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், சங் பரிவார் அமைப்புகளின் சில கொள்கைகளுடன், அதிமுகவின் கொள்கைகள் ஒத்துப் போவது உண்மைதான். குறிப்பாக ராமர் பால விவகாரத்தில் இருவருக்கும் நிறைய கருத்தொற்றுமைகள் உள்ளன.
ஆனால், பாஜகவுடன், அதிமுக கூட்டணி வைப்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை. அதற்கு நாங்கள் அவசரப்படவில்லை. இப்போதைய சூழ்நிலையில் யாருடனும் கூட்டணி வைப்பதற்கு நாங்கள் அவசரம் காட்டவில்லை.
லோக்சபாவுக்குத் தேர்தல் வருமா என்பதில் பெரும் குழப்ப நிலை காணப்படுகிறது. நிலைமை தெளிவாக இல்லை. எப்போது தேர்தல் வரும் என்பது தெரியவில்லை. லோக்சபாவுக்கு மட்டுமல்லாது, தமிழக சட்டசபைக்கும் சேர்த்து இடைத் தேர்தல் நடக்குமா என்பதிலும் தெளிவான நிலை இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் காலத்தில்தான் பேசி முடிவெடுப்போம்.
சங் பரிவார் அமைப்புகளுடன் சேர்ந்து அதிமுகவும் சேது சமுத்திரத் திட்டத்ைத எதிர்ப்பதாக முதல்வர் கருணாநிதி கூறுவது தவறு. நாங்கள் சங் பரிவார் அமைப்பில் இல்லை. பாஜகவுடனும் நாங்கள் கூட்டணி வைத்திருக்கவில்லை.
நாங்கள் ஒரு சுதந்திரமான கட்சி. எங்களுக்கென்று கொள்கைகளும், கோட்பாடுகளும் உள்ளன.
ராமர் பற்றி கருணாநிதி விமர்சித்தது ஒரு குற்றச் செயல். ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மனதை அவர் புண்படுத்தியுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும். ஒரு சாதாரண மனிதர் இப்படி விமர்சித்திருந்தால் அவர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பார்கள்.
இந்த பிரச்சனை தொடர்பாக கருணாநிதி தனது முதலைமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மத்திய அரசும் திமுக மந்திரிகளை மந்திரி சபையில் இருந்து நீக்க வேண்டும். திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
காங்கிரஸ் பொதுச்செயலாளராக ராகுல்காந்தி நியமிக்கப்பட்டிருப்பதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த கட்சியின் தலைமை பதவிக்கு ஒரே குடும்பத்தின் பரம்பரையினர் தான் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை கிடையாது.
அதிமுக ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியில் தான் இருக்கிறது. மத்தியில் காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக, புதிதாக ஒரு 3வது அணியை உருவாக்கும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை.
இந்த கூட்டணியில் இருந்த அதிமுகவை புறக்கணித்துவிட்டு, தெலுங்குதேசம், சமாஜ்வாடி போன்ற கட்சிகளை இணைத்து புதிய அணியை உருவாக்க கம்யூனிஸ்ட்டுகள் முயற்சித்து வருகிறார்களா என்பது பற்றியும் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார் ஜெயலலிதா.