குழந்தை இல்லாத ஏக்கத்தில் கேரள தம்பதி கன்னியாகுமரியில் தற்கொலை
கன்னியாகுமரி:
குழந்தை இல்லாத ஏக்கத்தில் கேரளாவைச் சேர்ந்த கணவனும், மனைவியும் கன்னியாகுமரிக்கு வந்து விடுதியில் தற்கொலை செய்து கொண்டனர்.
கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜுக்கு நேற்று மாலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபரும், இளபெண்ணும் வந்தனர்.
அவர்கள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்ததாகவும், தங்குவதற்கு ஒரு அறை வேண்டும் என்றும் கேட்டனர். அவர்கள் முகவரியாக சரத்சந்திரன் நாயர், சிந்து, மலையான்வீடு, திருவனந்தபுரம், கேரளா என்று கொடுத்து தங்கினர்.
பின்னர் வெளியே சென்று விட்டு இரவு லாட்ஜ் திரும்பினர். விடுதி ஊழியரை அழைத்து, காலையில் சூரிய உதயத்தைக் காண வேண்டும், எனவே அதிகாலையில் எழுப்புமாறு கூறி விட்டுப் படுக்கச் சென்றனர்.
அதன்படி அதிகாலை லாட்ஜ் ஊழியர் அந்த ஜோடி தங்கியிருந்த அறை கதவை தட்டினார். எனினும் பூட்டப்பட்டிருந்த கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. எனவே சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர் மேலாளரிடம் தகவல் கூறினார்.
அதையடுத்து போலீசுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசீலன் மற்றும் போலீசார் அந்த லாட்ஜிக்கு விரைந்து சென்றனர்.
போலீசாரின் முன்னிலையில் அந்த அறை கதவு உடைக்கப்பட்டு உள்ளே பார்த்த போது அந்த காட்சி திடுக்கிட வைத்தது. படுக்கையில் அந்த ஜோடி விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தது.
அவர்களின் அருகே ஒரு செல்போன் கிடந்தது. அதனை கைப்பற்றி விசாரித்தபோது அந்த ஜோடிக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது என்றும் குழந்தையில்லாத ஏக்கத்தில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
மேலும் அவர்களின் உண்மையான முகவரி ஆரியநாடு, திருவனந்தபுரம் என்பதும் தெரியவந்தது. உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications