நடுக்கடலில் மீனவர்கள் மோதல் குமரி மீனவர்கள் நெல்லையில் சிறைவைப்பு
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி நடுக்கடலில் குமரி, நெல்லை மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டத்தை சேர்ந்தவர் அந்தோணி செபஸ்டியன். அதே பகுதியை சேர்ந்தவர் ஜேசுவன் குருசு. இவர்களுக்கு சொந்தமான 2 விசைபடகுகள் மூலம் சுமார் 20 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதிக்கு கட்டுமரங்களில் வந்த நெல்லை மாவட்டம் கூத்தாம்குளம் பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கும், விசை படகு மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் விசைபடகில் வந்த குமரி மீனவர்களை விசை படகுடன் நெல்லை மீனவர்கள் கடத்தி சென்று தங்களுடைய ஊரில் சிறை வைத்தனர். இதையடுத்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற விசைபடகு மீனவர்கள் மீண்டும் வீடு திரும்பாததால் அவர்களுடைய குடும்பத்தினர் கவலையடைந்து கன்னியாகுமரி போலீசில் தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் விசாரணை செய்த போலீசார் ராதாபுரம் மற்றும் கூடன்குளம் போலீசுடன் கூத்தாங்குளம் பகுதிக்கு விரைந்தனர். பின்னர் அங்கிருந்தவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி சிறை வைக்கப்பட்ட வீசை படகு மீனவர்களை மீட்டனர்.