பலாத்காரம் செய்வதற்காக மாணவியை அடைத்து வைத்த ஆசிரியர் கைது
புதுக்கோட்டை:
பலாத்காரம் செய்வதற்காக பத்தாம் வகுப்பு மாணவியை வகுப்பறையில் அடைத்து வைத்திருந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பணியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் மறவாமதுரை பகுதியைச் சேர்ந்தவர் உஷா ராணி. 15 வயதாகும் இவர் சடையம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில், பத்தாவது வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 26ம் தேதி அவர் ஸ்பெஷல் கிளாஸுக்குப் போயிருந்தார். ஆனால் வகுப்பு முடிந்து அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குழப்பமடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்குச் சென்றனர். அங்கு உஷாவின் வகுப்பாசிரியர் முத்து இருப்பதைப் பார்த்தனர்.
அவரிடம் உஷா குறித்துக் கேட்டபோது, அவர் மங்கனூர் கிராமத்துக்கு தனது தோழியுடன் போனதைப் பார்த்ததாக முத்து தெரிவித்தார்.
ஆனால் அவர் பேச்சில் பெற்றோர் திருப்தி அடையவில்லை. இதையடுத்து ஒவ்வொரு வகுப்பாக சென்று கதவைத் திறந்து பார்த்தனர். அப்போது ஆசிரியர்கள் தங்கும் அறையில் உஷா அமர்ந்திருப்பதைப் பார்த்து திடுக்கிட்டனர்.
வீட்டுக்குக் கூட்டிச் சென்று அவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தபோது, பாலியல் பலாத்காரம் செய்வதற்காக தன்னை ஆசிரியர் முத்து அடைத்து வைத்திருந்ததாக உஷா கூறியுள்ளார்.
இதையடுத்து உஷாவின் பெற்றோரும், மற்ற பொதுமக்களும் சேர்ந்து பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் போலீஸார், கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
ஆசிரியர் முத்து மீது ஏற்கனவே இதுபோன்ற புகார்கள் இருந்து வந்தனவாம். கல்யாணமாகி, குழந்தைகளையும் பெற்ற முத்து, மாணவிகளிடம் இதுபோல தவறாக நடப்பதாக அடிக்கடி புகார்கள் வருகின்றன. எனவே அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், கைது செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதுவரை போராட்டத்தை விட மாட்டோம் என அனைவரும் பிடிவாதமாக கூறியதால் ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரை சஸ்பெண்ட் செய்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்லம் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications