ராஜ்நாத் சிங்குடன் இன்று கெளடா பேச்சு இழுபறிக்கு முடிவு வருமா?
டெல்லி:
கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் தொடர்பாக டெல்லியில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை, மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவெ கெளடா இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
டெல்லியில் பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கர்நாடக விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பாஜக செய்தித் தொடர்பாளர் யஷ்வந்த் சின்ஹா பேசுகையில், இரு கட்சிகளுக்கும் இடையே 20 மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதை இல்லை என்று முதல்வர் குமாரசாமி கூற முடியாது.
அந்த ஒப்பந்தம் பேச்சுவார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. அது அமல்படுத்தப்பட வேண்டும். மதிக்கப்பட வேண்டும். ஆட்சிப் பகிர்வு தொடர்பாக ஏற்பட்ட ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் கிடையாது. எடியூரப்பாதான் பாஜகவின் முதல்வர் வேட்பாளர்.
மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் தேவெ கெளடா, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை இன்று சந்தித்துப் பேசுகிறார். இதில் சுமூக நிலை ஏற்படும் என நம்புகிறோம்.
தேவெ கெளடா இன்று ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசிய பின்னர் நாளை மீண்டும் பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் கூடி விவாதிக்கவுள்ளது.
கெளட, ராஜ்நாத் சிங் சந்திப்பின்போது துணை முதல்வர் எடியூரப்பாவும் கலந்து கொள்கிறார்.
அமைச்சரவைக் கூட்டம்:
இதற்கிடையே, கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தை முதல்வர் குமாரசாமி திடீரென இன்று கூட்டியுள்ளார்.
இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மட்டும் பங்கேற்பர். துணை முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜக அமைச்சர்கள் பதவி விலகி விட்டதால் அவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்.
இருப்பினும், அவர்களுக்கும் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் பாஜகவினர் கண்டிப்பாக கலந்து கொள்ள மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.
இக்கூட்டத்தில் என்ன விவாதிக்கப்படும் என்பது தெரியவில்லை. ஆனால் விசேஷமாக எதுவும் இருக்காது எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications