லண்டன்: மூக்குத்தி அணிந்த இந்து பெண்ணுக்கு மீண்டும் வேலை
லண்டன்:
மூக்குத்தி அணிந்ததற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்ட இந்துப் பெண்ணுக்கு மீண்டும் இங்கிலாந்து நிறுவனம் வேலை கொடுத்துள்ளது.
லண்டனில் வசித்து
வருபவர் அம்ரித் லால்ஜி. இந்துப் பெண்ணான இவர் லண்டன் விமான நிலையத்தில், யூரெஸ்ட் நிறுவனத்தின் சார்பில் வாடிக்கையாளர் விவகார ஊழியர் மற்றும் கிளீனராக பணியாற்றி வந்தார்.
3 மாதங்களுக்கு முன்பு இவர் மூக்குத்தி அணிந்து வேலை பார்த்தாக கூறி வேலையிலிருந்து நீக்கி விட்டது யூரெஸ்ட் நிறுவனம்.
மூக்குத்தி அணிவதால் பாக்டீரியாக்கள் பரவு என்று கூறிய யூரெஸ்ட் நிறுவனம், லால்ஜி தொடர்ந்து மூக்குத்தி அணிந்து வேலைக்கு வந்ததால் அவரை பணியிலிருந்து நீக்கியது.
இதற்கு இங்கிலாந்தில் உள்ள இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து மத சம்பிராதயப்படி, திருமணமான பெண்கள் மூக்குத்தி அணிவது முக்கியமானது. எனவே லால்ஜியை வேலையை விட்டு நீக்கியது தவறு என்று எதிர்ப்பு கிளம்பியது.
எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து லால்ஜியை மீண்டும் வேலைக்கு சேர்த்துள்ளது யூரெஸ்ட் நிறுவனம். இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில், நிறுவனத்தின் விதிகள் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை முதல் லால்ஜி மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார். அவர் தொடர்ந்து மூக்குத்தி அணியலாம். அவர் சமையலறைப் பகுதியில் வேலை பார்க்கவில்லை என்பதால் அவர் மூக்குத்தி அணிய அனுமதிக்கப்படுகிறது.
சமையலறைப் பணியில் இருப்பவர்கள் மட்டுமே உடலைத் துளைக்கும் வகையிலான நகைகளை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தான் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது குறித்து லால்ஜி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மீடியாக்களின் ஆதரவால்தான் இது சாத்தியமாகியுள்ளது. எனது சங்கமும், இந்துக் கோவில்களும் எனக்கு ஆதரவாக குரல் கொடுத்தன.
கடந்த 3 மாதங்களாக நான் மிகுந்த மன வேதையில் இருந்தேன். தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications