காஷ்மீர் சண்டையில் சென்னை மேஜர் மரணம்
சென்னை:
ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில், தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில், சென்னையைச் சேர்ந்த ராணுவ மேஜர் தினேஷ் ரகுராமன் வீர மரணம் அடைந்தார்.
சென்னை, குரோம்பேட்டை ராதாநகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான இவருக்கு மாலா என்ற மனைவியும், டாக்டர் அபர்ணா என்ற மகளும், தினேஷ் ரகுராமன் என்ற மகனும் இருக்கிறார்கள்.
இந்திய கடற்படையில் டாக்டராகப் பணிபுரியும் அபர்ணா, கர்நாடக மாநிலம் கார்வாரில் பணியில் இருக்கிறார். அவருக்கு கல்யாணமாகி விட்டது.
மகன் திணேஷ் ரகுராமன், தந்தை வழியில் ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றி வந்தார். சமீபத்தில்தான் இவருக்குத் திருமணம் ஆனது. மனைவி பெயர் லதா. லண்டனில் வேலை பார்த்து வரும் லதா, கர்ப்பமானதால், தாய் வீடான டெல்லிக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த 2ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் தங்மார்க் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் திணேஷ் ரகுராமன் உள்ளிட்ட 3 ராணுவ மேஜர்கள் வீர மரணம் அடைந்தனர்.
லதாவின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக ரகுமாரன் குடும்பத்தினர் டெல்லிக்கு வந்திருந்தனர். இந்த நிலையில்தான் ரகுராமன் மரணச் செய்தி லதாவின் வீட்டை அடைந்தது.
இதனால் அனைவரும் பெரும் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர். பின்னர் ரகுராமனின் உடல் லதாவின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதை தந்தை கிருஷ்ணமூர்த்தி ராணுவ சல்யூட் அடித்து பெற்றுக் கொண்டார்.
நாட்டுக்காக தனது மகன் உயிரிழந்தது குறித்து பெருமைப்படுவதாக கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
ரகுராமனின் உடல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.












Click it and Unblock the Notifications