தமுமுகவின் முஸ்லிம் வாக்காளர் கணக்கெடுப்பு
நாகர்கோவில்:
தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு வாரிய சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், முஸ்லீம் வாக்காளர்கள் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி கூறியுள்ளார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக மாநில பொதுச்செயலாளரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான ஹைதர் அலி நேற்று நாகர்கோவில் வந்தார்.
அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் வக்பு வாரிய சொத்துக்களுக்கு வாடகை செலுத்தப்படாமலும், குத்தகை கொடுக்கப்படாமலும் உள்ளது. இவ்வாறு உள்ள சொத்துக்களை கணக்கெடுத்து வருகிறோம். ஏராளமான சொத்துக்கள் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கிறது. இது கோப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்களை மீட்கவும், உண்மை நிலையை தெரிந்து கொள்ளவும் 2 நாள் சுற்றுப்பயணமாக குமரி மாவட்டம் வந்துள்ளேன்.
தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு வாரிய சொத்துக்கள் முழுவதையும் ஆய்வு செய்தபிறகு அவை அனைத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 6 மாத காலமாக கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.
புள்ளி விவர கணக்கு:
இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சதுர அடிகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு பல கோடியாகும். எங்களிடம் இருக்கும் சொத்துக்களில் 25 சதவீதம் வருமானம் வருகிறது. 75 சதவீத சொத்துக்கள் பயன் இல்லாமல் இருக்கிறது. அவற்றையும் பயன் உள்ளதாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம்.
சில முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் வக்பு வாரிய சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அவர்களிடம் இருந்தும் மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்களை மீட்க அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் பற்றிய புள்ளி விவரம் தவறாக இருக்கிறது. இந்த புள்ளி விவர கணக்கை அரசு முறையாக எடுக்க வேண்டும். வாக்காளர் அடிப்படையில் எவ்வளவு ஜனத்தொகை இருக்கிறது என்று கணக்கெடுக்கும் பணியை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த பணி அடுத்த மாதம் தொடங்கும்.
முதல்- அமைச்சருக்கு நன்றி:
தேர்தல் அறிக்கையில் சொன்னபடி இஸ்லாமியர்களுக்கம், கிறிஸ்தவர்களுக்கும் தலா 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக முதல்- அமைச்சர் கலைஞருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
த.மு.மு.க. தொடங்கியபோது இந்த இயக்கம் தேர்தலில் பங்கு பெறாது என்று முடிவு செய்திருந்தோம். கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த த.மு.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அரசியலில் இஸ்லாமியர் வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதை பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தோம்.
எனவே த.மு.மு.க. தேர்தலில் நேரடியாக பங்கேற்குமா? அல்லது துணை அமைப்புகளை ஏற்படுத்தி பங்கேற்குமா? அல்லது வேறு இயக்கங்களுடன் இணைந்து பங்கேற்குமா? என்பதை அடுத்தடுத்து நடைபெறும் கூட்டங்களில் முடிவு எடுக்கப்படும் என்றார் ஹைதர் அலி.