பாஜகவினர் நடமாட முடியாது - ஜி.கே.மணி
சேலம்:
சேது சமுத்திர திட்டத்தை முடக்க நினைத்தால் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் எவரும் நடமாட முடியாது என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கோரி சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு பாமக சார்பில் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், சேது சமுத்திர திட்டம் நிறைவேறினால் தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்ற பயம் மதவெறி கும்பலுக்கு வந்துவிட்டது. நாடாளுமன்ற தேர்தல் வந்தால், தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட பாஜக கூட்டணிக்கு கிடைக்காது.
குஜராத் உள்ளிட்ட 3 வட மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வருவதால், ராமர் பால பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர். தேர்தலை உள் நோக்கமாகக் கொண்டு சேது சமுத்திர திட்டத்தை முடக்க நினைக்க கூடாது.
அப்படி முடக்க நினைத்தால் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் எவரும் நடமாட முடியாது என்று எச்சரிக்கின்றேன் என்றார் மணி.