For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு 14 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் கீழ் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 14 பேரின் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

Mk.Balanசைதாப்பேட்டை தொகுதியிலிருந்து அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் பாலன். குடும்பத்துடன் மந்தைவெளியில் வசித்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த பாலன், கடந்த 2000ம் ஆண்டு கருத்து வேறுபாடால் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார்.

கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி காலையில் தனது வீட்டிலிருந்து வாக்கிங் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவர் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தும் எந்தவித பலனுமில்லை. இதையடுத்து பாலனின் மகன் மணிமாறன், காணாமல் போன தன் தந்தையை கண்டுபிடித்து தருமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவினை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், காணாமல் போன பாலனை கண்டுபிடிக்க சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. விசாரணை நடத்திய போலீசார், முன்னாள் எம்எல்ஏ பாலன் கடத்தி கொலை செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.

காணாமல் போன அன்று பாலனை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள எம்ஆர்சி நகர் பகுதியில் அவரை ஒரு கும்பல் கடத்தி சென்றுள்ளது. பின்னர் அவரை தாம்பரத்தில் உள்ள ஒரு சேமியா நிறுவனத்தில் வைத்து கொலை செய்து அவரது சடலத்தை எருக்கஞ்சேரி சுடுகாட்டில் வைத்து எரித்து விட்டது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக பாலமுருகன் என்பவனிடம் விசாரித்ததில், செந்தில்குமார் என்பவன் பாலனை கடத்தி சென்றதாகவும், அவரை விடுவிக்க ரூ.1 கோடி பணம் கேட்டு தர மறுத்ததால் அவரை கொலை செய்ததாகவும் தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிமுக பிரமுகரான பூங்காநகர் மாணிக்கம், பாலமுருகன், செந்தில்குமார், ஹரிதரா, சோமசுந்தரம், சங்கர் கணேஷ், இருதயராஜ், உதயக்குமார், அன்பு, சம்பத், சுவாமிக்கண்ணு, சொரி ரமேஷ், பாம் செல்வம், ஜெகதீசன், குணசேகர், கணேசன், ரொமிட்டா மேரி, லீலா சங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை விரைவு நீதிமன்றம் ரொமிட்டா மேரி, கணேசன் ஆகிய இருவர் தவிர, மற்ற 16 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தங்கள் மீது விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து செந்தில்குமாரைத் தவிர மற்ற 15 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் முருகேசன், கே.என்.பாஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், குற்றவாளிகளில் இருவர் கொடுத்த வாக்குமூலத்தை பார்க்கும் போது அவர்கள் தான் எம்.கே.பாலனை கொன்றது தெரிய வருகிறது. போலீஸ் தரப்பிலும் இந்த கொலை பற்றி சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளனர்.

ஆகவே விரைவு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை செல்லும். இதனை நாங்கள் உறுதி செய்கிறோம் என்று தீர்ப்பளித்தனர். இருப்பினும் லீலா சங்கரை மட்டும் நீதிபதிகள் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X