கமெண்ட்ஸ் பகுதி தடை ஏன்?
அன்பு நண்பர்களே,
உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களின் உள்ளங்களில் இடம் பிடித்துள்ள இணையத் தளம் தட்ஸ்தமிழ். உங்களது தொடர்ந்த நல்லாதரவும் ஊக்கமும் தான் கடந்த 7 ஆண்டுகளாக இந்தத் தளத்தை பெரும் வளர்ச்சிக்கு இட்டுச் சென்றது.
ஆனால், சமீபகாலமாக சில வாசகர்கள் கமெண்ட்ஸ் பகுதிகளில் எழுதும் சொற்களும், வார்த்தைகளும் பெரும் வருத்தத்தையும் துயரத்தையும் தரும் வகையில் உள்ளன.

நம் தகுதியை காட்டுவது தான் நமது வார்த்தைகள். இதை உணராத சிலர் மிகத் தவறான சொற்களால் பிறரை விமர்சிப்பதும், கேவலமாக திட்டுவதுமாக கமெண்ட்ஸ் பகுதியை அறுவெறுப்பான ஒரு இடமாக மாற்றி வருகின்றனர்.
ஏராளமான பெண்களும், குழந்தைகளும் படிக்கும் தளம் தட்ஸ்தமிழ். இது உலகெங்கும் வசிக்கும் தமிழ் குடும்பங்களுக்கான தளம். இதில் வேதனை தரும் வார்த்தைகளையும், வலி தரும் விமர்சனங்களையும் ஏற்கவே முடியாது.
கமெண்ட்ஸ் பகுதியில் ஆரோக்கியமான விவாதங்களை விட்டுவிட்டு ஜாதி, மதரீதியில் மோதல் நடத்துவதும், தலைவர்களையும் பிறரையும் தரக் குறைவாக விமர்சிப்பதும் பெரும் வேதனையைத் தருகிறது. அது மன்னிக்க முடியாத செயல்.
எங்களால் முடிந்த அளவுக்கு அது போன்ற வார்த்தைகளையும் கமெண்ட்ஸ்களையும் நீக்கி வருகிறோம். பல வாசகர்களின் ஐ.பி. அட்ரெஸ்களை பிளாக் செய்தும் வந்திருக்கிறோம்.
இ-மெயில்கள் மூலமாக எச்சரித்தும் வருகிறோம். ஆனாலும் கமெண்ட்ஸ் பகுதியில் கண்டதையும் எழுதும் பழக்கத்தை சிலர் கைவிடவே இல்லை.
இதனால் கமெண்ட்ஸ் பகுதியில் புதிய விஷயங்களை 'போஸ்ட்' செய்வதை இப்போதைக்கு தடை செய்துள்ளோம்.
நம் முகம் வெளியில் தெரியவில்லை என்பதற்காக நாம் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என நாம் நினைத்தால் நம் தரத்தையும் கெளரவத்தையும் நாமே குறைத்துக் கொள்வதாகத் தானே அர்த்தம்.
இவ்வாறு எழுதுவோரின் ஐபி அட்ரஸ் மற்றும் விவரங்களை அடையாளம் காண்பது என்பது மிக எளிது என்பதை உங்களில் பெரும்பாலானவர்கள் அறிந்தது தான்.
அதை வைத்து தவறு செய்பவர்களுக்கு சிக்கல் உருவாக்கவும் முடியும். அந்த எல்லைக்கு எங்களை தள்ள வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
-ஆசிரியர்












Click it and Unblock the Notifications