பெட்ரோல் விலை உயராது-தேர்தல் பயத்தால் ஒத்தி வைப்பு
டெல்லி:
லோக்சபாவுக்கு இடைத் தேர்தல் வரும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயராது என்ற அறிவிப்பை பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ளார்.
கச்சா எண்ணையின் விலை சர்வதேச சந்தையில் வெகுவாக உயர்ந்து வருவதால், பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக உயர்த்த வேண்டும் என எண்ணை நிறுவனங்கள் அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்த நெருக்குதல் காரணமாக பெட்ரோல், டீசல் விலைய உயர்த்த மத்திய பெட்ரோலிய அமைச்சகமும் அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது.
இதனால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும், பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோராவும் சந்தித்தனர். அப்போது பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து பிரதமருடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
ஆனால் இப்போதைக்கு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தாமல் நிலைமையை சமாளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இரு அமைச்சர்களிடமும் பிரதமர் அறிவுறுத்தினார். சாமானிய மக்களின் மீது அதிக சுமையை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார் என்று தெரிகிறது.
மேலும், டீசல் மீதான கலால் வரியை மாற்றி அமைப்பது குறித்தும் பிரதமருடன் இரு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர்.
விலையை உயர்த்தாமல் நிலைமையை சமாளிப்பது தொடர்பான திட்டத்தை அமைச்சரவை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் முரளி தியோராவை பிரதமர் கேட்டுக் கொண்டார்.
பெட்ரோலியப் பொருட்களின் விலைலை உயர்த்துவதில்லை என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதற்கு லோக்சபாவுக்கு இடைத் தேர்தல் வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பே காரணம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications