மறுபடியும் பாக். வருகிறாராம் நவாஸ் ஷெரீப்!
இஸ்லாமாபாத்:
முஷாரப் அரசால் 2 முறை நாடு கடத்தப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அடுத்த மாதம் மீண்டும் பாகிஸ்தான் திரும்பவுள்ளதாக அவரது மகன் ஹாசன் நவாஸ் கூறியுள்ளார்.
1999ம் ஆண்டு ரத்தம் சிந்தாத ராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தான் அரசைக் கைப்பற்றிய முஷாரப் பின்னர் நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தினார். அதன் பின்னர் சவூதியிலும், லண்டனிலும் வசித்து வந்த ஷெரீப் கடந்த செப்டம்பர் 10ம் தேதி பாகிஸ்தான் திரும்பினார்.
ஆனால் அவரை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்த பாகிஸ்தான் அரசு, பின்னர் மீண்டும் சவூதிக்கே ஷெரீப்பை நாடு கடத்தியது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் நாடு திரும்ப ஷெரீப் திட்டமிட்டுள்ளாராம். இதுகுறித்து அவரது மகன் ஹாசன் நவாஸ் கூறுகையில், எனது தந்தையும், சித்தப்பா சபாஷ் ஷெரீப்பும் ஒன்றாக நாடு திரும்பத் திட்டமிட்டுள்ளனர். தற்ேபாது எனது தந்தை மதீனாவில் உள்ளார்.
ரம்ஜானுக்குப் பிறகு அவர் ஜெட்டா செல்லவுள்ளார். அங்கு சிலநாட்கள் தங்கிய பின்னர் லண்டன் செல்வார். லண்டனில் இரண்டு அல்லது 3 வாரங்கள் தங்கி விட்டு எனது அப்பாவும், சித்தப்பாவும் நவம்பர் 15யிலிருந்து 30ம் தேதிக்குள் பாகிஸ்தான் திரும்புவார்கள் என்றார்.
ரம்ஜானுக்குப் பிறகு ஷெரீப் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என சவூதி அரசு ஷெரீப்புக்கு அனுமதி அளித்துள்ளதாம்.
ஏற்கனவே இரு முறை நாடு கடத்தப்பட்ட ஷெரீப் தற்போது 3வது முறையாக பாகிஸ்தான் திரும்பவுள்ளார். இப்போதும் நாடு கடத்தப்படுவாரா அல்லது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாரா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications