பெனாசிரைக் கொல்வோம் - தலிபன் மிரட்டல்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் திரும்பவுள்ள முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவை தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி கொன்று விடுவோம் என்று தலிபன் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
பாகிஸ்தானில் முஷாரப் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு கடத்தப்பட்டார். அவரைத் தொடர்ந்து பெனாசிர் பூட்டோ தானாகவே நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.
இந்த நிலையில் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் பெனாசிருக்கும், முஷாரப்புக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் உருவானது. இதன்படி பெனாசிர் மீதான அனைத்து ஊழல் வழக்குகளையும் முஷாரப் தள்ளுபடி செய்து விட்டார்.
இந்தப் பின்னணியில், சமீபத்தில் பாகிஸ்தான் அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் முடிவு அறிவிக்கப்படாமல் உள்ளது. இருந்தாலும் இத்தேர்தலில் முஷாரப் பெருவாரியான வாக்குகளைப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வருகிற 17ம் தேதி பெனாசிர் நாடு திரும்புகிறார். இந்த சமயத்தில், அவரை தற்கொலைப்படை தாக்குதல் மூலம் கொலை செய்யப் போவதாக தலிபன் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து தலிபன் தலைவர் பைதுல்லா மசூத் கூறுகையில், பெனாசிர் நாடு திரும்பியதும் அவர் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி கொலை செய்வோம்.
இதற்காக தற்கொலைப் படை தீவிரவாதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பைதுல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications