பாஜக அதிருப்தியாளர்களை இழுக்கும் காங்.
டெல்லி:
குஜராத் மாநில பாஜக அதிருப்தித் தலைவர்களை காங்கிரஸ் கட்சிக்குள் இழுத்து, சட்டசபைத் தேர்தலில் நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் பெரும் நெருக்கடி தர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது அங்கு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது.
நரேந்திர மோடி மீது காங்கிரஸ் கட்சி சரமாரியாக பல்வேறு புகார்களைக் கூறினாலும், கோத்ரா ரயில் எரிப்பு உள்ளிட்ட பல சம்பவங்கள் மோடிக்கு சிக்கலை ஏற்படுத்தினாலும் கூட, மக்கள் மத்தியில் மோடிக்கு செல்வாக்கு இன்னும் குறையவில்லை.
இதனால் சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பலன் பெற காங்கிரஸ் முயன்று வருகிறது.
குஜராத் பாஜகவில் பல அதிருப்தியாளர்கள் உள்ளனர். மோடிக்கு எதிராக உள்ள இந்தத் தலைவர்களை காங்கிரஸ் கட்சிக்குள் இழுக்க காங்கிரஸ் முயன்று வருகிறது. இந்தப் பொறுப்பை மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான (முன்பு பாஜகவில் இருந்தவர்) சங்கர் சிங் வகேலா ஏற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாஜக அதிருப்தித் தலைவர்கள் சிலர் காங்கிரஸில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் சிலர் தாங்களாகவே கட்சியை விட்டு விலகியவர்கள், சிலர் கட்சியால் விலக்கப்பட்டவர்கள்.
இவர்களை காங்கிரஸில் சேர்ப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை. விரைவில் கட்சி மேலிடக் குழு குஜராத் வருகிறது. அவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
பாஜக அதிருப்தியாளர்களை இழுப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு சட்டசபைத் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறீர்களா என்ற கேள்விக்கு வகேலா பதிலளிக்கையில், நிச்சயமாக பலன் கிடைக்கும்.
தேர்தலில் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. மற்ற கட்சிகளுக்கு இங்கு இடமில்லை.
முன்பு பாஜகவுக்கு விஸ்வ இந்து பரிஷத் தீவிர ஆதரவு அளித்து வந்தது. தற்போது அந்த நிலை இல்லை. இதுவும் காங்கிரஸுக்கு சாதகமாக அமையும்.
குஜராத் மாநிலத்தில் பெரிய அளவில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக மோடி அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்றார் வகேலா.
பாஜகவில் அதிருப்தியில் உள்ளவர்களை தன் பக்கம் இழுப்பதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது காங்கிரஸ். குஜராத் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை முன்னின்று நடத்த விரைவில் ராகுல் காந்தி வரவுள்ளார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிகள் சூடு பிடிக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications