காதல் தம்பதிக்குப் பாதுகாப்பு - கோர்ட்
வேலூர்:
காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையிடமிருந்து பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் கணவனுடன் தஞ்சம் அடைந்தார் பெண். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.
நெல்லையைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் ஒரு சப் இன்ஸ்பெக்டர். இவருக்கு சுபா என்ற மகள் இருக்கிறார். சென்னையில் பிசியோதெரபி 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
சென்னையில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வரும் பாலாஜி என்பவரை, சுபா கடந்த 3 வருடங்களாக காதலித்து வருகிறார். இந்த நிலையில் மகளுக்கு மாப்பிள்ளைப் பார்த்துள்ளார் முருகேசன். அதை கடந்த 5ம் தேதி சுபாவுக்கு போன் செய்து கூறிய அவர், நிச்சயதார்த்தம் செய்ய வேண்டும், ஊருக்குக் கிளம்பி வருமாறு கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுபா, தனது தந்தையிடம் காதலைக் கூறியுள்ளார். இதைக் கேட்டு கோபமடைந்தார் முருகேசன். காதலை கடுமையாக எதிர்த்துள்ளார்.
இதையடுத்து யோசித்துப் பார்த்த சுபா தனது காதலன் பாலாஜியிடம் ஆலோசித்துள்ளார். இதைத் தொடர்ந்து இருவரும் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் வைத்து நண்பர்கள் மற்றும் பாலாஜியின் உறவினர்கள் புடை சூழ திருமணம் செய்து கொண்டனர்.
இதைக் கேள்விப்பட்ட முருகேசன் கடும் கோபமடைந்தார். ஊரிலிருந்து சிலரைக் கூட்டிக் கொண்டு சென்னைக்கு விரைந்தார். ஆனால் பாலாஜியும், சுபாவும், வேலூரில் உள்ள பாலாஜியின் மாமா வேலாயுதம் வீட்டுக்குப் போய் விட்டனர்.
முருகேசன் விடவில்லை. வேலூர் முகவரியை அறிந்து கொண்டு அங்கு உள்ளூர் போலீஸாருடன் சென்றார். வேலாயுதம் வீட்டில் சுபாவும், பாலாஜியும் இல்லை. இதையடுத்து வேலாயுதத்தின் தம்பியை வேலூர் போலீஸார் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்று அடித்துள்ளனர்.
முருகேசனின் செயல்களை அறிந்த சுபாவும், பாலாஜியும் வேலூர் நீதிமன்றத்தை அணுகினர். நீதிபதி அகிலா ஷாலினியிடம் பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி அகிலா ஷாலினி, சுபா மகளிர் காப்பகத்தில் ஒரு மாதம் தங்கியிருக்க வேண்டும் எனவும், சுபாவின் கணவர் பாலாஜி மற்றும் வேலாயுதத்தின் குடும்பத்தாருக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.