50 சட்ட மாணவர்களுக்கு முன்ஜாமீன்
சென்னை:
சென்னையில் உதவி ஆணையர் உள்ளிட்ட போலீஸாரைத் தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வரும் 50 சட்டக் கல்லூரி மாணவர்ளுக்கு சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
2 நாட்களுக்கு முன்பு சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அருகே உள்ள ஹோட்டலில் கலாட்டாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து வந்தனர். மாணவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து போகுமாறு போலீஸார் கூறினர். ஆனால் மாணவர்கள், போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர், போலீஸாரின் வாகனங்களும் தாக்கப்பட்டன.
இதில் உதவி ஆணையர் உள்ளிட்ட நான்கு போலீஸார் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து 51 சட்டக் கல்லூரி மாணவர்கள் முன் ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பெரியகருப்பையா, மாணவர் இளையராஜா தவிர மற்ற 50 பேருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
50 பேரும் கைது செய்யப்பட்டால் அவர்களை சில நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யலாம் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications