அதிக மாணவர்களுடன் சென்ற வேன்கள் பறிமுதல்
நாகர்கோவில்:
பள்ளிக் கூட மாணவ, மாணவிகளை நிர்ணயித்த அளவுக்கு மேல் அதிக அளவில் ஏற்றிச் சென்ற 10 வேன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
வேன், ஆட்டோக்களில் அதிக மாணவ, மாணவிகளை ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கண்காணிக்க பறக்கும் படை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வேன்கள், ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்,பி சந்தோஷ்குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அளவுக்கு அதிகமாக மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பேக்குகளை வெளியே தொங்கும் வகையில் வந்த ஆட்டோக்களை மறித்து எச்சரித்தனர்.
மார்த்தாண்டம் பகுதியில் போக்குவரத்து எஸ்.ஐ கிருஷ்ணகுமார் தலைமையில் போலீசார் தீடீர் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதிகளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களை ஏற்றிக் கொண்டும், கதவை திறந்து வைத்துக் கொண்டும் சென்றதாக 10 வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனை ஓட்டிச் சென்ற டிரைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அதிக அளவில் பாரம் ஏற்றி சென்ற லாரி ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து எஸ்.பி சந்தோஷ்குமாரிடம் கேட்டபோது, அதிக மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள், வேன்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இது குறித்து கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications