ஒரு குழந்தைக்கு இரு தாய்கள் மல்லுக்கட்டு!
திருநெல்வேலி:
நெல்லையில் 10 மாத ஆண் குழந்தைக்கு இரண்டு பெண்கள் தாங்கள்தான் தாய் என்று கூறி போட்டி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அசரடி முதல் தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி சுப்புலெட்சுமி. கூலி வேலை செய்து வந்த பரமசிவம் கடந்த ஆண்டு திடீரென இறந்துவிட்டார். அப்போது சுப்புலெட்சுமி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். பின்னர் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. விதவையான சுப்புலெட்சுமி குழந்தையை வளர்க்க முடியாமல் கஷ்டப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சுப்புலெட்சுமி கைக் குழந்தையுடன் ஜங்ஷன் பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த பாபு, அவரது மனைவி சூசம்மா ஆகியோர் நின்று கொண்டிருந்தனர்.
குழந்தை இல்லாத அத்தம்பதிகளுக்கு சுப்புலெட்சுமியின் கையில் இருந்த குழந்தையை பார்த்ததும் ஆசை ஏற்பட்டது. எனவே குழந்தையை தூக்கி கொஞ்சினார்கள்.
அப்போது சுப்புலெட்சுமி தனது கணவர் இறந்துவிட்டதால் குழந்தையை தன்னால் வளர்க்க முடியவில்லை என்று கூறினார். இதையடுத்து அத் தம்பதியினர் எங்களுக்கும் குழந்தை இல்லை. நாங்கள் உங்கள் குழந்தையை வளர்க்கிறோம் என்று கூறினர். அதற்கு சுப்புலெட்சுமியும் சம்மதித்தார்.
இதைத் தொடர்ந்து சுப்புலெட்சுமிக்கு 500 ரூபாய் கொடுத்து அவர்கள் குழந்தையை வாங்கி சென்றனர். அந்த குழந்தைக்கு மணிகண்டன் என பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தனர். குழந்தையை கொடுத்தது பற்றி சுப்புலெட்சுமி தனது குடும்பத்தினரிடம் யாரிடமும் சொல்லவில்லை.
இந்நிலையில் சுப்புலெட்சுமியின் கணவரின் அக்காள் பார்வதி குழந்தை பற்றி கேட்டார். அதற்கு அவர் தான் பஸ் நிலையத்தில் நிற்கும் போது ஒரு தம்பதியினர் தனது கையில் இருந்த குழந்தையை பறித்து சென்று விட்டதாக கூறினார்.
இது குறித்து பார்வதி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதாவிடம் புகார் செய்தார். அதில் தனது தம்பியின் குழந்தையை கோட்டாரை சேர்ந்த பாபு, சூசம்மா கொண்டு சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டு தருமாறு கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து ஜங்ஷன் இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் அன்னபூரணி ஆகியோர் கோட்டார் சென்று பாபு, சூசம்மாவிடம் இருந்து குழந்தையை மீட்டு ஜங்சன் போலீஸ் நிலையத்திற்கு அவர்களை அழைத்து வந்தனர். சுப்புலெட்சுமி, பார்வதி ஆகியோரும் குழந்தையை வாங்கி செல்வதற்காக போலீஸ் நிலையம் வந்தனர்.
ஆனால் குழந்தை மணிகன்டன் வளர்ப்பு பொற்றோரிடம் இருந்து வர மறுத்து அழுதான். 6 மாதத்திற்கு மேல் தங்கள் குழந்தையை போல் பாசத்துடன் வளர்த்து விட்டதால் மணிகண்டனை கொடுப்பதற்கு மனமில்லாமல் அவர்களும் அழுதனர். மணிகன்டன், உண்மைத் தாய் சுப்புலெட்சுமியிடம் போக மறுத்துவிட்டான். இதனால் போலீசாரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
இது குறித்து சூசம்மா கூறும்போது எங்களுக்கு குழந்தை இல்லாததால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க நினைத்தோம். இந்நிலையில் பஸ் நிலையத்தில் சுப்புலெட்சுமி குழந்தையுடன் நிற்பதை பார்த்து அவரிடம் பேசினோம்.
அவர் குழந்தையை வளர்க்க முடியாது என்று கூறியதால் அவரது விருப்பப்படி பத்திரத்தில் எழுதி வாங்கி கொண்டுதான நாங்கள் குழந்தையை வாங்கி சென்றோம் என்றனர்.
இது குறித்து பார்வதி கூறும்போது எனது தம்பி இறந்ததில் இருந்து சுப்புலெட்சுமிக்கு மனநிலை பாதிப்பு இருந்தது. குழந்தையை அவள் சங்கரன்கோவிலில் உள்ள அவரது அண்ணன் வீட்டில் கொடுத்திருப்பதாக நினைத்தோம். பிறகுதான் அவள் பாபு, சூசம்மாவிடம் கொடுத்திருப்பது தெரிந்தது. குழந்தையை நாங்களே வளர்க்க தயாராக இருக்கிறோம் என்றார்.
இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று தெரியாமல் போலீஸார் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.