கருணாநிதி பேச்சில் தவறில்லை - கனிமொழி
டெல்லி:
வால்மீகியில் ராமர் குடித்தார் என்று கூறப்பட்டுள்ளதைத்தான் எனது தந்தை முதல்வர் கருணாநிதி கருத்தாக தெரிவித்தார் என முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், எனது தந்தையின் உண்ணாவிரதப் போராட்டம் அற வழியில் நடந்தது. அது சரியான நடவடிக்கைதான். இந்தப் போராட்டத்திற்காக உச்சநீதிமன்றம் மிகக் கடுமையான கருத்தைத் தெரிவித்தது தேவையற்றது. ஒரு நீதிபதி அப்படிப் பேசியிருக்கக் கூடாது.
ராமர் குடித்தார் என்று எனது தந்தை கூறவில்லை. வால்மீகி சொன்னதைத்தான் என்னுடைய தந்தை சுட்டிக்காட்டியிருந்தார். சேது சமுத்திர திட்டத்தை எதிர்ப்பவர்கள் ராமர் பெயரைச் சொல்லி அரசியல் ஆதாயம் தேட நினைக்கின்றார்கள். இது ராமரை அவமதிக்கும் செயலாகும்.
மாறன் குடும்பத்தாருக்கும், எங்களது குடும்பத்துக்கும் இடையே எந்த சண்டையும் இல்லை. அது அரசியல் சண்டைதான். கட்சியின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டால் கட்சிதான் அத்தகையவர்கள் குறித்து முடிவு எடுக்க வேண்டும். கட்சித் தொண்டர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் அதற்கு கட்டுப்பட்டு ஆக வேண்டும்.
அப்படி எடுத்த முடிவு தான் மத்திய அமைச்சரவையிலிருந்து தயாநிதி மாறனை நீக்குவது குறித்தது. மாறன் குடும்பத்தாருடன் ஏற்பட்ட உறவு முறிந்தது எங்கள் தந்தையின் மனதை பெரிதும் பாதித்தது. ஆனால் பொதுவாழ்வில் இதைப் போன்று எத்தனையோ வேதனைகளை பலமுறை எனது தந்தை பார்த்துவிட்டார்.
அவருக்கு நெருக்கமானவர்களே அவருக்கு எதிராக திரும்பியது இது ஒன்றும் முதல் முறை கிடையாது. ஆனால் இதுதான் வாழ்க்கை என்று அனுபவ பூர்வமாக அவர் உணர்ந்திருப்பதால், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு தனது கடமைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார் என்றார் கனிமொழி.












Click it and Unblock the Notifications