ஹைதராபாத்தில் சுனாமி எச்சரிக்கை மையம் தொடக்கம்: 13 நிமிடத்தில் எச்சரிக்கும்!
ஹைதராபாத்:
இந்தியாவை சுனாமி தாக்கி 3 ஆண்டுகள் கழிந்த நிலையில் ஹைதராபாத் நகரில், தேசிய சுனாமி மற்றும் புயல் எச்சரிக்கை மையம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்னிந்தியாவை சுனாமி பேரலை தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து சுனாமியை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை செய்வதற்கான மையத்தை நிறுவ மத்திய அரசு தீர்மானித்தது. இந்த மையத்தை ஹைதராபாத்தில் அமைக்கவும் திட்டமிடப்பட்டது.
அதன்படி தேசிய சுனாமி மற்றும் புயல் எச்சரிக்கை மையம் ஹைதராபாத்தில் நிர்மாணிக்கப்பட்டு இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது. இந்த மையத்தின் மூலம் பூகம்பம் ஏற்பட்டு, சுனாமி உருவான 13 நிமிடங்களில் அதுகுறித்து எச்சரிக்கை விடுக்க முடியும்.
இந்த மையத்தை இன்று நடந்த விழாவில் மத்திய அறிவியல் துறை அமைச்சர் கபில் சிபல் கலந்து கொண்டு சுனாமி எச்சரிக்கை மையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி, விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஹைதராபாத்தில் உள்ள இந்திய கடல் தகவல் சேவை மையத்தில் சுனாமி எச்சரிக்கை மையம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த மையம், தற்போது உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தை விட வித்தியாசமானது, அதி நவீனமயமானது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ. 125 கோடி மதிப்பில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. சுனாமி தவிர புயல், சூறாவளி உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் குறித்தும் இந்த மையம் எச்சரிக்கை விடுக்கும்.












Click it and Unblock the Notifications