டிவி சீரியலைப் பார்த்து 2 கொலை செய்த 4 பேர் கைது
பெங்களூர்:
டிவி தொடரைப் பார்த்து அதில் வருவது போல கார் டிரைவர்களைக் கொன்று கார்களைக் கொள்ளையடித்த 4 பேரை பெங்களூர் போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரைச் சேர்ந்தவர்கள் ரவி (25), சந்தோஷ் (20), பாபு (19), சோமா (17). நான்கு பேரும் டிவி தொடர் ஒன்றில், டிரைவர்களைக் கொன்று கார்களை கொள்ளையடிப்பது போன்று வந்த காட்சியைப் பார்த்தனர்.
தாங்களும் இதுபோல கார்களைத் திருடி அதை வைத்து நகர் முழுவதும் ஜாலியாக சுற்றி வரத் திட்டமிட்டனர்.
இதையடுத்து டிரைவர்களைக் குறி வைத்து கார் திருட்டில் குதித்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு டிரைவரைக் கொன்று உடலை காவிரி ஆற்றில் வீசி விட்டனர். பின்னர் காரைத் திருடிக் கொண்டு வந்து விட்டனர்.
இதேபோல இந்த வார தொடக்கத்தில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலா தலத்தில் டிரைவரைக் கடத்தி மது அருந்தி அவரை மயக்கடைய வைத்தனர். பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்றனர். அதன் பிறகு காருடன் தப்பினர்.
இந்த இரு கொலைகள் குறித்தும் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், நான்கு பேரும் சிக்கினர். கைது செய்யப்பட்ட நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.