'முள்ளால் குத்தியது போல'... கருணாநிதி
சென்னை:
1986ல் அன்பழகன் உள்ளிட்ட 10 பேரை சட்டசபையில் இருந்து நீக்கிய சம்பவத்தை நினைத்தால் இப்போதும் என்னை முள்ளால் குத்தியது போல் உள்ளது என முதல்வர் கருணாநிதி கூறினார்.
சபாநாயகர் மீது அதிமுக எம்.எல்.ஏ. போஸ் தொப்பி வீசியது குறித்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ்,
சபையின் மாண்பை குலைக்கும் வகையில் உறுப்பினர்கள் செயல்பட்டால் அவர்களை சபையில் இருந்து முழுமையாக நீக்கி வைக்கும் அதிகாரம் சபைக்கு உள்ளது. இதற்கு பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 1986ம் ஆண்டு பேராசிரியர் அன்பழகன் மற்றும் பத்து பேர் நீக்கப்பட்டனர்.
'சபையின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் அவர்களின் செயல்பாடு இருப்பதால் பத்து பேரும் உறுப்பினராக இருப்பதற்கான தகுதியை இழந்து விட்டனர்' என்று அப்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேபோன்று ஒரு நடவடிக்கையை இப்போது போஸ் மீது எடுக்க வேண்டும் என்று நான் கேட்கவில்லை. ஆனால், அப்படி யோசிக்க வேண்டிய நிலையில் தான் நாம் இப்போது இருக்கிறோம் என்றார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
அல்போன்ஸ் பேசுகையில் ஏற்கனவே 1986ல் இந்த சபையில் இருந்து அன்பழகன் மற்றும் பத்து பேர் விலக்கப்பட்டதாக எடுத்துக் காட்டினார். அதில் எனக்கு வருத்தம் தான். பழைய சம்பவங்களை நினைவு கூறும்போது, வரலாற்றில் பெருமிதம் கொள்ளத்தக்கதாக அது இருந்தால் மனதிற்கு இன்பம் ஏற்படும்.
பீட்டர் நினைவூட்டியது, தனது கருத்தை வலியுறுத்துவதற்காக குறிப்பிட்டார் என்றாலும் கூட, என்னை முள்ளால் குத்தியது போல் அந்த நிகழ்வு எனக்கு தோன்றுகிறது. அன்பழகன் மற்றும் ஒன்பது பேர் களத்தில் இறங்கி மொழிப் போராட்டம் நடத்தினர்.
அரசியல் சட்டத்தில் ஒரு மொழியை தாழ்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் சட்டத்தின் குறிப்பிட்ட பகுதியை தீயிட்டு கொளுத்தினர். கட்சித் தலைமை எடுத்த முடிவை அவர்கள் நிறைவேற்றினர். அதனால், சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது. தமிழுக்காக வாதாடிய அன்பழகனையும், மற்றவர்களையும் ஒரே தீர்மானத்தின் மூலம் சபையில் இருந்து நீக்கினர். அந்த தீர்மானத்தை முன்மொழிந்தவரை பற்றி நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. தமிழ் முழக்கம் செய்தவர், பாரதிதாசன் பாடல்களை இளைஞர்கள் உள்ளத்தில் பதித்தவர் நெடுஞ்செழியன். அவரைக் கொண்டே அந்த காரியத்தை செய்தனர்.
இதே போராட்டம் டெல்லியிலும் நடந்தது. அப்போது திமுக ராஜ்யசபா எம்பியாக இருந்த வை.கோபால்சாமி, சம்பந்தப்பட்ட அரசியல் சட்டத்தை தீயிட்டு கொளுத்தினார். அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அவர்கள் வை.கோபால்சாமி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மொழி போராட்டத்தின் ஒரு கட்டமாக நடந்துள்ளது என்று எடுத்துக் கொண்டனர்.
ஆனால், இங்குதான் அதையே ஒரு சாக்காக வைத்து அன்பழகனையும், மற்றவர்களையும் நீக்கினர். திமுக, காங்கிரஸ் ஆட்சி இருக்கும்போது எதிர்க்கட்சியினர் பழி வாங்கப்படுவதில்லை. பக்தவச்சலம் ஆட்சியில் தான் என்னை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். எனினும் திருக்குவளையில் எனது தாயார் பெயரில் தாய்-சேய் நல விடுதி திறக்க முயன்றபோது, காங்கிரஸ் கட்சியினர் எதிர்த்தனர். ஆனால், பக்தவச்சலமே வந்து அந்த விடுதியை திறந்து வைத்தார். அப்போது ஒரு பண்பாடு இருந்தது.
சட்டசபைக்கு மதிப்பளிப்பவர்களில் முதல் ஆளாக இருப்பவர் அன்பழகன். அவர், சபையின் கண்ணியத்திற்கு குறைவாக எப்போதும் நடந்து கொண்டதில்லை என்றார் கருணாநிதி.