மத்திய அரசுக்கு இடதுசாரிகள் இறுதி எச்சரிக்கை
டெல்லி:
அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் ரத்தாகி விட்டது என்று மத்திய அரசு திங்கள்கிழமை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடது சாரிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீர்மானமாக அறிவிக்க வேண்டும் என இடதுசாரிக் கட்சிகள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளன.
சிபிஐ பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தன் இதுகுறித்துக் கூறுகையில், இந்த விவகாரத்தில் நாங்கள் காலவரையின்றி காத்திருக்க விரும்பவில்லை. திங்கள்கிழமை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஒப்பந்தம் ரத்தாகி விட்டதாக மத்திய அரசு இறுதியாக, உறுதியாக அறிவிக்க வேண்டும்.
இக்கூட்டத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஒப்பந்தம் ரத்தாகி விட்டது என்ற பதிலை மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றார் பர்தன்.
சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறும் என்ற நம்பிக்கை தனக்கு இன்னும் இருப்பதாக கூறியிருந்தார். அதேசமயம் கடந்த வாரம் அவர் பேசுகையில், இது மட்டுமே அரசின் பிரச்சினை இல்லை. ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால் வாழ்க்கை அத்துடன் முடிந்து போகாது என்றும் கூறியிருந்தார்.
இதனால் ஒப்பந்தம் இருக்கிறதா, இல்லையா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில்தான் பர்தன் இப்படி கருத்து வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications