விஜயதசமி: பிரதீபா பாட்டீல், மன்மோகன் சிங் வாழ்த்து
டெல்லி:
விஜயதசமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழத்து தெரிவித்துள்ளனர்.
இன்று நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பல மாநிலங்களில் இது தசரா என்ற பெயரிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டு மக்கள் நல்ல நலத்துடனும், ஒற்றுமையுடனும், அமைதியுடனும், வளர்ச்சியுடனும் விளங்க இந்த தருணத்தில் வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள செய்தியில், தசரா விழா நாட்டு மக்களுக்கு நல்ல நலத்தையும், வளத்தையும் கொண்டு வரட்டும் என்று வாழ்த்தியுள்ளார்.
சோனியா காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், சகிப்புத் தன்மை, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல், அமைதி, வளம் உள்ளிட்டவற்றை நமக்குள் கொண்டு வர இந்த திருவிழா உதவட்டும் என்று கூறியுள்ளார்.
மைசூரில் விழாக்கோலம்:
தசரா சிறப்பாக கொண்டாடப்படும் மைசூரில் தசரா கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. மைசூர் அரண்மணையில் பிரமாண்ட விளக்கலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நேற்று ஆயுத பூஜையையொட்டி மைசூர் அரச குடும்பத்தினர் சிறப்புப் பூஜை செய்தனர்.
மைசூர் அரசரின் வாரிசான ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் பூஜைகளை செய்தார். அரண்மனையில் உள்ள ஆயுதங்களுக்கு பூஜை போடப்பட்டது.
பின்னர் ஆயுதங்கள் அனைத்தும் தங்க தேரில் வைக்கப்பட்டு புவனேஸ்வரி கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பூஜிக்கப்பட்டது.
இன்று தசரா விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. யானைகள், குதிரைகள் படை சூழ நடைபெறும் தசரா ஊர்வலம் மிகவும் பிரசித்தி பெற்றது. தசரா ஊர்வலத்தைக் காண மைசூர் நகரில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.












Click it and Unblock the Notifications