ஆசிரியரை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் கைது
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் ஆசிரியர் ஒருவரை ராணுவ வீரர் சுட்டுக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வீரரை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள செளகிபால் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத் மிர். இவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரை அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்கள் சுட்டுள்ளனர். இதில் ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ராணுவத்தைக் கண்டித்து குப்வாரா - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் குதித்தனர். அந்த வழியாக வந்த வாகனங்களை தீவைத்துக் கொளுத்தினர். சம்பந்தப்பட்ட ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்காதவரை உடலைப் புதைக்க மாட்டோம் என கூறினர்.
தீவிரவாதிகளை வேட்டையாடுவதாக கூறி ராணுவம் தொடர்ந்து அப்பாவிகளை சுட்டு வீழ்த்தி வருகிறது. இதற்குக் காரணமான வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து ராணுவ அதிகாரிகள் உடனடியாக சர்ச்சையில் சிக்கிய ராணுவ வீரர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டது எதிர்பாராமல் நடந்த சம்பவம் என்று ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications