காலை வாரும் கூட்டணிக் கட்சிகள் - பதவி விலக மன்மோகன் விருப்பம்
டெல்லி: அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகளே எனது காலை வாரி விடும் வகையில் நடந்து வருவது வேதனை தருகிறது. இந்த நிலை நீடித்தால் நான் பதவியில் நீடிப்பதில் அர்த்தம் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக எழுந்து வரும் குழப்ப நிலைக்கு முடிவு கட்ட வேண்டும், ஒப்பந்தம் ரத்தாகி விட்டதா அல்லது இருக்கிறதா என்பதை காங்கிரஸ் கூட்டணி தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த பின்னணியில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் மற்றும் இடது சாரித் தலைவர்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் தனது வருத்தத்தையும், வேதனையையும் வெளியிட்டுப் பேசியதாக கூறப்படுகிறது.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக சில கூட்டணிக் கட்சிகளே தனது காலை வாரி விடும் வகையில் நடந்து கொள்வதாக மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். இது தனக்கு வேதனை தருவதாகவும், இந்த நிலை நீடித்தால் தான் பிரதமர் பதவியில் நீடிப்பதில் அர்த்தம் இல்லை என்றும் பதவியிலிருந்து விலக விரும்புவதாகவும் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சோனியா காந்தி தலையிட்டு பிரதமரை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து மன்மோகனால் ஏற்பட்ட பரபரப்புக்கு முடிவு கட்டினார் என்று கூறப்படுகிறது.
மன்மோகன் சிங் மேலும் பேசுகையில், அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் அதைக் கிடப்பில் போட்டுள்ளதால், நாட்டின் பெயருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பல பாதிப்புகளை இது ஏற்படுத்தி விடும் என்றார்.
திமுக மீதும் அதிருப்தி:
அணு சக்தி ஒப்பந்தத்தை மத்திய அமைச்சரவை அங்கீகரித்து ஒப்புதல் அளித்தபோது அந்த முடிவை திமுக, தேசியவாத காங்கிரஸ் கட்சி, ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகியவையும் ஏற்றுக் கொண்டன. ஆனால் இந்தக் கட்சிகள் எல்லாம் இப்போது மாற்றிப் பேசுவது ஆச்சரியத்தைத் தருவதாகவும் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் கூட்டணிக் கட்சிகள் குறித்து அதிருப்தி வெளியிட்டிருப்பதும், பதவி விலக முன்வந்திருப்பதும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து மீண்டும் சந்தித்துப் பேசிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், இடதுசாரிகள் கூட்டணியும் தீர்மானித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications