புலிகள் தாக்குதலில் முக்கிய ராணுவ உளவு விமானம் சேதம்- 40 மில்லியன் டாலர் நாசம்
![]() |
| Click here for more images |
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விடுதலைப் புலிகளின் வான் புலிகள் விமானப்படை நேற்று மத்திய இலங்கையில் உள்ள அனுராதபுர விமான தளத்தை தாக்கி இலங்கை அரசுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தன.
விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் (தற்கொலைப் படை) பிரிவைச் சேர்ந்த 21 வீரர், வீராங்கனைகள் இதில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் தொடங்கிய இந்த தாக்குதலுக்குப் பின்னர் புலிகளுக்கும், இலங்கைப் படையினருக்கும் இடையே பல மணி நேரம் சண்டை நடந்தது.
தமிழீழ விமானப் படையின் 2 விமானங்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டன. இந்தத் தாக்குதலில் இலங்கை விமானப்படைக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாக லண்டனிலிருந்து வெளியாகும் தி டெலிகிராப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 மில்லியன் டாலர் மதிப்பிலான விமானங்களும், முக்கிய சாதனங்களும் இந்தத் தாக்குதலில் சேதமடைந்திருப்பதாகவும் டெலிகிராப் தெரிவித்துள்ளது.
புலிகளின் தாக்குதலில் சேதமடைந்த முக்கிய விமானம் பீச்கிராப்ட் சர்வைலன்ஸ் விமானமாகும். இது உளவு பார்க்கும் முக்கிய விமானம் ஆகும். கடந்த ரணில் விக்கிரமசிங்கே ஆட்சியின் போது இந்த விமானம் வாங்கப்பட்டது. இதன் மதிப்பு 14 மில்லியன் டாலர் ஆகும்.
இந்த விமானம் தவிர 2 எம்.ஐ 17 ரக ஹெலிகாப்டர்கள், 2 எம்.ஐ. 24 ரக ஹெலிகாப்டர்கள், 3 ஆளில்லாத உளவு விமானங்கள், ஒரு கே.8 ஜெட் விமானம், எட்டு பிடி6 பயிற்சி விமானங்களும் தாக்குதலில் சேதமடைந்திருப்பதாக டெலிகிராப் செய்தி கூறுகிறது.
இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், 12 முதல் 18 விமானங்கள் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(விழுந்தது புலிகளின் ஹெலிகாப்டர் அல்ல: புலிகளின் பெல் ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாகவும், அதிலிருந்த 2 புலிகள் பலியாகிவிட்டதாகவும் முதலில் வந்த செய்திகள் தவறு. அந்த ஹெலிகாப்டரும் ராணுவத்திற்கே சொந்தமானதாகும்).
தாக்குதலில் 'வண்டு' காலி!:
பீச்கிராப் சர்வைலன்ஸ் விமானத்தை புலிகள் தாக்கி அழித்திருப்பது இலங்கைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானம் அதி நவீனவசதிகளைக் கொண்டது.
ரேய்தியான் என்ற நிறுவனத்தின் தயாரிப்பான இந்த உளவு விமானம், குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களையும் எளிதில் கண்டுபிடிக்கும் திறன் கொண்டது. அப்படிப்பட்ட விமானத்தை இலகு ரக விமானத்தைக் கொண்டு புலிகள் தாக்கி அழித்திருப்பது இலங்கை அரசுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த விமானத்தை இலங்கை அரசு வாங்கியது. ஒப்பந்தப்படி ஒரு பீச்கிராப்ட் 200 ரக விமானம், ஒரு ஹிசார் ரேடார் கருவி, தரைக்கட்டுப்பாட்டு நிலையம், உதிரி பாகங்கள், பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவியை ரேய்தியான் நிறுவனம் வழங்கியது.
இந்த விமானத்தை வாங்கிய பிறகுதான் புலிகளின் பல்வேறு நடமாட்டங்களை இலங்கை படையினர் எளிதாக கண்டறிந்து தாக்குதலில் வெற்றிகரமாக ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானத்துக்கு இலங்கை படையினர் வண்டு என்று செல்லமாகவும் பெயரிட்டிருந்தனர்.
தாக்குதல் படையில் 3 பெண் புலிகள்:
நேற்று நடந்த விமானத் தாக்குதலில் தற்கொலைப்படையைச் சேர்ந்த 21 பேர் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர்.
2 லெப்டினென்ட் கர்னல்கள், 6 மேஜர்கள், 12 கேப்டன்கள், ஒரு லெப்டினென்ட் தரத்திலான வீரர் உள்ளிட்டோர் இதில் அடக்கம்.
ஒரு லெப்டினென்ட் கர்னல் தலைமையிலான படை திரிகோணமலையிலிருந்தும், 2 வீரர்கள், ஒரு மேஜர், ஒரு கேப்டன் ஆகியோர் மட்டக்களப்பிலிருந்தும், ஒருவர் முல்லைத்தீவிலிருந்தும், ஒருவர் மன்னாரிலிருந்தும், 3 பேர் கிளிநொச்சியிலிருந்தும், 11 பேர் யாழ்ப்பாணத்திலிருந்தும் இந்த படையில் இடம் பெற்றிருந்தனர்.
தாக்குதலுக்கு முன்பு அனைவரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனிடம் ஆசி பெற்று புகைப்படமும் எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர் (அந்தப் படங்கள் இங்கே) என விடுதலைப் புலிகளின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.













Click it and Unblock the Notifications