கந்து வட்டிக் கொடுமை- கலெக்டரிடம் தஞ்சமடைந்த தம்பதி
திருநெல்வேலி: கந்து வட்டிக் கொடுமை தாங்க முடியாமல் கணவனும், மனைவியும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தஞ்சமடைந்து புகார் மனு கொடுத்தனர்.
நெல்லை மாவட்டம் உவரியை அடுத்துள்ள கூடுதாழை வடக்கு தெருவை சேர்ந்தவர் இன்னாசி. மீன்பிடி தொழிலாளி. இவருடைய மனைவி சுதா. இவர்கள் இருவரும் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். கலெக்டர் கோ.பிரகஷை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, நாங்கள் குடும்ப செலவுக்காக கூடுதாழையை சேர்ந்த பவுலின், மார்த்தாள், லிவிங்ஸ்டன், நிக்சன், கலையரசி, ரூபின்டோ ஆகியோரிடம் கடனாக பணம் வாங்கி இருந்தோம். அதற்குரிய வட்டியையும் சரிவர கட்டி வந்தோம்.
இந்தநிலையில் எனக்கு (இன்னாசி) காலில் ஆணி வந்ததால் தொழிலுக்கு போகவில்லை. இதனால் என் குடும்ப வருவாய் குறைந்தது.
அசலுக்கு மேல் வட்டி கொடுத்துள்ள நிலையில் நாங்கள் வாங்கிய கடனுக்கு மேல் ரூ.7 லட்சம் தருமாறு கேட்டு எங்கள் இருவரையும் லிவிங்ஸ்டன் உள்ளிட்ட 6 பேரும் மிரட்டி வருகின்றனர்.
கூடுதல் பணத்தை கேட்டு அவர்கள் கொடுக்கும் தொல்லையால் நாங்கள் எங்கள் மூன்று குழந்தைகளையும் உறவினர்கள் வீட்டில் விட்டு விட்டு நாங்கள் மட்டும் ஊரை விட்டு வந்து விட்டோம். நாங்கள் நிம்மதியாக வாழ தாங்கள் தான் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், நாங்கள் கடனாக வாங்கியது ரூ.60 ஆயிரம் தான். வட்டிக்கு மேல் வட்டி போட்டு அவர்கள் இப்போது ரூ.7 லட்சம் கேட்கிறார்கள். எங்களுக்கு சொந்தமாக இருந்த வல்லத்தையும் விற்று வட்டி கட்டி உள்ளேன். இருப்பினும் கூடுதல் பணம் கேட்டு மிரட்டினர்.
அவர்களின் தொல்லை தாங்காததால் தான் நெல்லை வந்து தற்கொலை செய்யலாம் என்று முடிவெடுத்தோம். அப்போது எங்களுக்கு தெரிந்த ஒருவர் எங்களை தடுத்து கலெக்டரிடம் மனு கொடுக்க கூறியதால் மனு கொடுத்து உள்ளோம்.
தற்போது நாங்கள் ஊரில் இல்லாததால் எங்களை பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் தேடி வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே எங்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இது குறித்து நெல்லை டி.ஐ.ஜி கண்ணப்பனிடம் மனு கொடுக்க இருக்கிறோம் என்று கண்ணீர் மல்க கூறினர்.












Click it and Unblock the Notifications