கபடி துணை கேப்டன் கவிதாவுக்கு சிறப்பான வரவேற்பு
மதுரை: ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த 2வது ஆசியக் கோப்பை பெண்கள் கபடிப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று சொந்த ஊரான மதுரை திரும்பிய இந்திய அணியின் துணை கேப்டன் கவிதாவுக்கு மதுரையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சாரட் வண்டியில் ஏற்றி அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்று சிறப்பித்தனர்.
டெஹ்ரானில் நடந்த ஆசியக் கோப்பை பெண்கள் கபடிப் போட்டி நடந்தது. இதில் கலந்து கொண்ட இந்திய அணியின் துணை கேப்டனாக மதுரையைச் சேர்ந்த கவிதா பங்கு வகித்தார். இந்திய அணிக்கு இப் போட்டியில் தங்கப் பதக்கம் கிடைத்தது.
நேற்று கவிதா சென்னையிலிருந்து மதுரை திரும்பினார். ரயில் நிலையத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.
ரயில் நிலையத்தில் பெரும் திரளானோர் கூடி கவிதாவை வரவேற்றனர். பின்னர் ரயில் நிலையத்திலிருந்து கவிதா இரட்டைக் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டார். இந்திய ஆடவர் கபடி அணியில் இடம்பெற்றுள்ள வீரர் கர்ணனும் உடன் வந்தார்.
ரயில் நிலையத்திலிருந்து அருகே உள்ள சேதுபதி மேல் நிலைப்பள்ளிக்கு கவிதா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பாராட்டு விழா நடந்தது.
மதுரை மாவட்ட கபடி சங்க தலைவரும், துணை மேயருமான பி.எம்.மன்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கவிதாவுக்கு நினைவுப் பரிசனை வழங்கினார்.
இந்த வரவேற்பு குறித்து கவிதா பெரும் மகிழ்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், மதுரை, செக்கானூ ரணியில் நடந்த மு.க.அழகிரி பிறந்த நாள் விழா போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வெற்றி பெற்றதால் இன்றைக்கு இந்திய பெண்கள் கபடி அணியில் துணைகேப்டன் என்ற அங்கீகாரம் கிடைத்து உள்ளது.
கிரிக்கெட் வீரர்களை போல மதுரை மக்கள் வரவேற்பு கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
கபடி வீராங்கனை கவிதாவுக்கு மதுரை மக்கள் சாலையின் இரு மருங்கிலும் கூட நின்று கைகளை அசைத்து உற்சாகமாக வரவேற்றது படு வித்தியாசமாக இருந்தது.
சமீபத்தில் 2வது முறையாக உலக சாம்பியன் பட்டம் பெற்றுத் திரும்பிய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதும், சாரட் வண்டியில் அவர் அழைத்துச் செல்லப்பட்டதும் நினைவிருக்கலாம்.
கிரிக்கெட் வீரர்களை மட்டுமே ஆராதித்து வந்த மக்கள் செஸ், கபடி என பிற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் அதே அளவில் உற்சாக வரவேற்பு அளிப்பது உண்மையிலேயே வித்தியாசமான அதேசமயம், மகிழ்ச்சியான விஷயம்தான்.












Click it and Unblock the Notifications