கோவில்களில் மீண்டும் கருணை இல்லங்கள்- கருணாநிதி
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் சிறுவர்களை பராமரிக்கும் கருணை இல்லங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய பின் கருணாநிதி பேசியதாவது,
துரைமுருகன் தான், பொதுப்பணித் துறை அமைச்சராக இருப்பதை பெருமிதமாகக் குறிப்பிட்டு, இந்தத் துறையில் தான் நம்முடைய முதல்வரும் அமைச்சராக இருந்தார் என்றார். நான் அமைச்சராக வருவதற்கு முன்பே பொதுப்பணியில் ஈடுபட்டதால்தான், என்னை பொதுப்பணித்துறை அமைச்சராக ஆக்கினார் அண்ணா.
அமைச்சர்களை நியமிக்கும்போது என்னை காட்டி, நீ பொதுப்பணி என்றார். அதில் இரண்டு பொருள் உண்டு என எனக்குத் தெரியும். எனவே எனக்கு பொதுப்பணி என்பது புதுப்பணி அல்ல, பழைய பணி தான்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலை வாய்ப்புகள் தாராளமாக வழங்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருந்தோம். அதற்கேற்ப லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை நேரடியாக வழங்க முடியாவிட்டாலும், அவர்களுக்கு மாதந்தோறும் ஓர் உதவித் தொகையை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
திமுக ஆட்சியில் மையிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிறுவர்களுக்கான ஓர் அமைப்பை, ஆலயத்தின் பாதுகாப்பில் அவர்கள் உதவியுடன் படிக்க, உண்ண, உறங்க, விளையாட ஓர் இடம் வேண்டும் என இல்லங்களை அமைத்தோம்.
அதற்கு கருணை இல்லம் என கிருபானந்தவாரியார் பெயர் வைத்தார். பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் கருணை என்ற பெயரே இருக்கக்கூடாது என அந்தப் பெயரை எடுத்துவிட்டனர். இப்போது அந்த இல்லங்கள் இல்லை.
மீண்டும் அந்த கருணை இல்லங்கள் திறக்கப்படும், தொடங்கப்படும்.
பொதுப்பணித்துறை வரலாற்றில் 1972ம் ஆண்டிலிருந்து இதுவரை 2,873 உதவிப் பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 1,953 பேர் திமுக ஆட்சிக் காலங்களில் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications