குடி போதையில் சாலையில் விழுந்த ரவுடி வாகனம் மோதி பலி
நாகூர்: மது அருந்தி விட்டு சாலையில் விழுந்து கிடந்த ரவுடி மீது அடையாளம் தெரியாத வாகனம் ஏறியதில் அவர் இறந்தார்.
நாகூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் செந்தில் குமார். பிரபல ரவுடி. இவர் மீது நாகூர், காரைக்கால் உள்பட பல காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன.
இவர் நேற்று முன்தினம் இரவு காரைக்கால் அருகே உள்ள மேலவான்சூர் என்ற ஊரில் உள்ள ஒரு சாராயக் கடையில் மது அருந்தி உள்ளார்.
போதை அதிகம் ஆனதால், நடக்க முடியாமல் நடு ரோட்டில் சுருண்டு விழுந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியுள்ளது. இதில் செந்தில் குமார் படு காயம் அடைந்தார்.
தகவல் அறிந்த திருப்பட்டினம் போலீசார் செந்தில் குமாரை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலே செந்தில் குமார் இறந்தார்.
இது குறித்து திருப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.