தேவர் ஜெயந்தி-அரசு விழாவாக கொண்டாட தடை கோரி வழக்கு
சென்னை: முத்துராமலிங்க தேவரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணியின் அமைப்பாளர் சிம்சன் தாக்கல் செய்துள்ள இந்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 100வது ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை இந்த விழா கொண்டாடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், இதை தமிழக அரசு விழாவாக கொண்டாடுவதைத்தான் எதிர்க்கிறோம்.
இந்த விழாவையொட்டி கமுதியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த செயல் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு அரசு மறைமுகமாக ஆதரவு அளிப்பதையே காட்டுகிறது.
ராஜாஜி, பாரதி, பாரதிதாசன், பெரியார் ஆகியோரின் நூற்றாண்டு விழாக்களை மத்திய-மாநில அரசுகள் கொண்டாடின. ஆனால், அந்த விழாக்களின்போது இதுபோன்ற நீண்ட விடுமுறை விடவில்லை.
காரணம் அந்தத் தலைவர்களுக்கு பின்பலமாக எந்த சமுதாயமும் இல்லை. ஆனால், முத்துராமலிங்க தேவர் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் தலைவராக விளங்கினார்.
எனவே தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாடுவதை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும். தேவர் பிறந்த தினமான 30ம் தேதி தவிர மற்ற நாட்களில் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
எதிர்காலத்தில் எந்த சமுதாய தலைவருக்கும் பிறந்த நாள் விழாக்களை கொண்டாட விடுமுறை விடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சிம்சன்.












Click it and Unblock the Notifications