ஏட்டு மகளை கடத்திய சப்-இன்ஸ்பெக்டர்!-ஏட்டு தற்கொலை!!
கரூர்: கரூரில் ஏட்டு மகளை சப் இன்ஸ்பெக்டர் கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் குணசேகரன். இதே காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் கனகராஜ்.
கனகராஜ் தோகமலை அருகே பண்ணைபட்டியில் வசித்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி, மகள் வனிதா. ஒரு மகனும் உள்ளனர்.
சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் கனகராஜ் வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம்.
இந்நிலையில் வனிதா மீது காதல் கொண்டார் குணசேகரன். இதனால் அடிக்கடி வனிதாவை பார்க்க ஏட்டு வீட்டிற்கு செல்வதுமாக இருந்துள்ளார்.
இதைப் புரிந்து கொண்ட ஏட்டு கனகராஜ் தன் வீட்டிற்கு வரவோ, போனில் பேசவோ வேண்டாம் என குணசேகரனிடம் கூறியுள்ளார்.
மேலும் தனது மகள் வனிதாவை பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்த்துவிட்டு விடுதியில் தங்க வைத்தார்.
இந் நிலையில் வனிதா திடீரென காணமல் போனார். தந்தை கனகராஜ் பல இடங்களில் விசாரித்தும், தேடியும் கிடைக்கவில்லை.
வனிதாவை சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், அவரது டிரைவர் தமிழ்செல்வன், காவலர் சக்திவேல் ஆகியோர் கூட்டாக சேர்ந்து கடத்தியதாக தெரியவந்தவுடன் மனம் உடைந்தார் கனகராஜ்.
தனது உயர் அதிகாரியே தன் மகளைக் கடத்தியதை ஜீரணிக்க முடியாமல், இதை மேல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும் தைரியம் இல்லாமல் கனகராஜ் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தனது மகளை கடத்தி, கணவரின் தற்கொலைக்கு காரணமான சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், டிரைவர் தமிழ்செல்வன், காவலர் சக்திவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏட்டு மனைவி விஜயலட்சுமி தோகமலை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இந் நிலையில் வனிதாவும் குணசேகரனும் ரகசிய திருமணம் செய்து கொண்டுவிட்டதாகவும் தகவல் பரவியுள்ளது.
சம்பவம் குறித்து அறிந்த திருச்சி டிஐஜி அசோக் குமார் தற்கொலை செய்து கொண்ட ஏட்டின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினார்.
வனிதா, குணசேகரன் திரும்பி வந்தால் தான் உண்மை நிலை தெரியவரும்.












Click it and Unblock the Notifications