தேர்தலில் புலிகள் போட்டியிட இலங்கை சட்டத் திருத்தம்
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியல் இயக்கமாக, தேர்தலில் பங்கேற்றுப் போட்டியிட வசதியாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் அந்நாட்டு அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம் முறிந்து போய் விட்டது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் கடுமையாக மோதி வருகின்றனர்.
குறிப்பாக தமிழர் பகுதிகளில் இலங்கை முப்படைகளும் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். புலிகள் வேட்டை என்ற பெயரில் அப்பாவித் தமிழர்கள் பலரை இலங்கை படைகள் கொன்று குவித்துள்ளன. மனித உரிமை மீறல்களும் கணக்கிலடங்காத அளவுக்கு அதிகரித்து விட்டது.
இதுகுறித்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கை அரசை கண்டித்துள்ளன. இதன் காரணமாக ஜனநாயக ரீதியில் பல காரியங்களை செய்து, அமைதியை நிலை நாட்ட முயல்வதாக காட்டிக் கொள்வதற்காக சில முடிவுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது இலங்கை அரசு.
அதன் ஒரு கட்டமாக தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பு அரசியல் கட்சியாக, தேர்தலில் பங்கேற்றுப் ேபாட்டியிடும் வகையில் புதிய சட்ட மசோதா ஒன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்புச் செய்தது.
தமிழர் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழர் தேசிய கூட்டணி இந்த மசோதாவை எதிர்த்து வாக்களித்தது. இறுதியில் மசோதாவுக்கு ஆதரவாக 66 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் கிடைத்தன.
இதன்படி புதிய கட்சிகளைப் பதிவு செய்யும் அதிகாரம் அந்நாட்டு தேர்தல் ஆணையருக்கு வழங்கப்படுகிறது. விடுதலைப் புலிகள், கருணா குழுவினர் உள்பட அனைவருமே தங்களை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். தேர்தலில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் வான் ரீதியாகவும் தற்ேபாது பலம் பெற்று வருகின்றனர். அவர்களின் ஆயுத பலம் பெருகி விட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அவர்கள் தனித் தமிழ் ஈழத்தை அறிவிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் விடுதலைப் புலிகள் தேர்தலில் போட்டியிட வசதியாக புதிய சட்ட மசோதாவை அந்நாட்டு அரசு கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications