மகளை கேலி செய்தவரை அடித்த தந்தை 2 ஆண்டுகளுக்கு பின் படுகொலை
திருநெல்வேலி: பெண் விவகாரத்தில் ஏற்பட்ட விரோதத்தில் தொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே உள்ள விஜயனேரி தேரிவிளையை சேர்ந்தவர் ராஜதுரை. கல் உடைக்கும் தொழிலாளி.
நேற்று அதே ஊரில் பொன்னுலிங்கம் என்பவரின் வீட்டு கிரகப்பிரவேசம் நடந்தது. இந்த விழாவுக்கு ராஜதுரை சென்றார். விருந்து பந்தலில் அமர்ந்து அவர் சாப்பிட்டார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ஜெகன் என்பவர் கையில் அரிவாளுடன் வந்து சாப்பிட்டு கொண்டிருந்த ராஜதுரையின் கழுத்தில் வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த ராஜதுரை சாப்பிட்டு கொண்டிருந்த இடத்திலேயே இறந்தார். இதனால் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் பதறி அடித்து ஓடினர். அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொலை செய்யப்பட்ட ராஜதுரையின் உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழுதார். கலகலப்பாக இருந்த கிரக பிரவேச வீடு ஒரு நிமிடத்தில் துக்க வீடு ஆனது.
ராஜதுரை கொல்லப்பட்டது பற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி டி.எஸ்.பி. ஸ்டான்லி மைக்கேல், இன்ஸ்பெக்டர்கள் அசோகன், ராமகிருஷ்ணன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் முன் விரோதம் காரணமாக பழிக்கு பழியாக ராஜதுரை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த ராஜதுரையின் மகளிடம் ஜெகன் குறும்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜதுரையும், அவரது மகனும் சேர்ந்து ஜெகனை தாக்கி உள்ளனர். இது தொடர்பாக தென்தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த சம்பவத்திற்கு பழி வாங்கியே தீருவேன் என்று ஜெகன் கூறி வந்துள்ளார். இந்நிலையில் தான் நேற்று ராஜதுரையை ஜெகன் கொலை செய்துள்ளார். தற்போது ஜெகன் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications