ஜெவுக்கு 'புல்லட் புரூப்' அம்பாசிடர் தரத் தயார்-அரசு
சென்னை: ஜெயலலிதாவுக்கு குண்டு துளைக்காத அம்பாசிடர் கார் தயார் நிலையில் உள்ளது. அதை அவருக்கு வழங்க தமிழக அரசு தயாராகே உள்ளது என மாநில உள்துறைச் செயலாளர் மாலதி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தனக்கு 'உண்மையான' இசட் பிளஸ் பாதுகாப்பை தனக்கு வழங்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்த விவரத்தை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டது.
இந் நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக உள்துறைச் செயலாளர் மாலதி அரசின் சார்பில் தனது பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 2001ம் ஆண்டு முதல் இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் குறைபாடு இருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. கடந்த மாதம் 25ம் தேதி அன்று நடைபெற்ற பாதுகாப்பு மறு ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து பாதுகாப்பு கொடுத்து வருகிறோம்.
அவருக்கு குண்டு துளைக்காத கார் வழங்கப்பட்டது. ஆனால் அது அம்பாசிடர் கார் என்பதால் அவர் பயன்படுத்தவில்லை. இப்போதும் அந்த கார் தயார் நிலையில் உள்ளது.
தண்டபாணி என்பவர் ஜெயலலிதா வீட்டுக்குள் நுழைந்தது பற்றி தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தண்டபாணி அதிமுக அனுதாபி. அவருடைய தந்தை தீவிர அதிமுக உறுப்பினராவார். திருப்பூர் மகேந்திரா கார்மெண்ட் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்த தண்டபாணி கடந்த 16ம் தேதி சென்னைக்கு வந்துள்ளார்.
அவருக்கு தெரிந்த செக்யூரிட்டி ஆபிசர் ராஜராஜன் என்பவரை பார்ப்பதற்காக ஜெயலலிதாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். ஜெயலலிதாவின் வீட்டை பொறுத்தவரை தேசிய பாதுகாப்பு படை வீரர்களோ, போலீசாரோ உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. ஜெயலலிதாவின் மெய்க்காப்பாளர் மற்றும் உதவியாளர் மட்டுமே செல்ல முடியும்.
வேறு நபர்கள் செல்ல ஜெயலலிதாவின் அனுமதி பெற்று, தனியார் செக்யூரிட்டி ஊழியர்கள் சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல முடியும். தண்டபாணியை தனியார் செக்யூரிட்டி அதிகாரிகள் தான் உள்ளே அனுமதித்துள்ளனர்.
தண்டபாணி நுழைந்த விவகாரம் தொடர்பாக ஜெயலலிதாவிடம் விசாரணை நடத்த அதிகாரி சென்றார். ஆனால், ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்களிடம் தான் அவரால் விசாரிக்க முடிந்துத. ஜெயலலிதாவிடம் விசாரணை நடத்த அவரை அனுமதிக்கவில்லை.
ஜெயலலிதாவுக்கு 55 போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள். அவர் சென்னையை விட்டு கொடநாடுக்கோ அல்லது சிறுதாவூரோ சென்றால் வழக்கம் போல் அவரது பாதுகாப்பு குறித்து திட்டம் வகுக்கிறோம். அதன்படி முழு பாதுகாப்பு வழங்குகிறோம்.
அவர் செல்லும் இடத்தில் முன்கூட்டியே தகவல் தெரிவித்து உள்ளூர் போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. அவர் தங்கும் வீட்டை சுற்றி மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்படுகிறது.
ஆனால் ஜெயலலிதா கேட்பதுபோல செல்போன்களை செயலிழக்க வைக்கும் ஜாமர் கருவி இசட் ப்ளஸ் பிரிவின் கீழ் வராது. எனவே அவை அவருக்கு வழங்கப்படவில்லை.
ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு வழங்குவது மாநில அரசின் கடமையாகும். அதிலிருந்து அரசு தவறவில்லை. அவருக்காக தயார் நிலையில் இருக்கும் குண்டு துளைக்காத காரை வழங்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு தமிழக அரசின் பதில் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், விசாரணையின்போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும் அதிமுக எம்பியுமான ஜோதி, அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பது 90 சதவீதம் பொய்யான தகவல்கள். ஜெயலலிதாவுக்கு எந்த பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்றார்.
இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் விடுதலை, பதில் மனுவில் கூறியுள்ளபடி ஜெயலலிதாவுக்கு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு கூடுதல் பாதுகாப்பு தரவும், குண்டு துளைக்காத அம்பாசிடர் கார் வழங்கவும் அரசு தயாராக இருக்கிறது என்றார்.
அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஜெயலலிதா தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் புதன்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.