ஆணுக்கு பாலியல் தொல்லை தந்த ரயில்வே போலீசார்
சென்னை: ஆண் இசை ஆசிரியருக்கு பாலியல் தொல்லை தந்துள்ளனர் மூன்று ரயில்வே போலீசார்.
இந்த கேவலமான சம்பவம் சென்னை ஆவடியில் நடந்தது.
ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் ரமணன் (வயது 45) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இசை ஆசிரியரான இவர் திருவல்லிக்கேணியில் இசைக் கருவிகள் விற்கும் கடையில் வேலை பார்க்கிறார். அத்தோடு மாணவர்களுக்கு தனியாக இசை பயிற்சியும் அளித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் இரவு 10 மணியளவில் வியாசர்பாடியில் இருந்து மின்சார ரயிலில் ஆவடிக்கு சென்றார். ரயிலில் கூட்டமே இல்லை. இதனால் ரமணன் இருக்கையில் தூங்க ஆரம்பித்தார்.
நன்றாக தூங்கிவிட்டதால் ரயில் ஆவடியை அடைந்தது கூட தெரியவில்லை. திடீரென விழித்து பார்த்தபோது ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் கிளம்பிக் கொண்டிருந்தது.
இதையடுத்து ஓடும் ரெயிலில் இருந்து பிளாட்பாரத்தில் குதித்தார்.
கையில் ஹார்மோனிய பெட்டியுடன் குதித்த ரமணனை அங்கு நின்றிருந்த 3 ரயில்வே போலீசார் வந்து பிடித்தனர். ஓடும் ரயிலில் இருந்து இறங்கியதற்காக விசாரிக்க வேண்டும் என்று கூறி ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், விசாரணை என்ற பெயரில் ரமணனிடம் அந்த காக்கிகள் மிக ஆபாசமாக நடந்து கொண்டனர். அவரது ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக்கி பாலியல்ரீதியல் தொல்லை தந்தனர்.
மேலும் அவரிடம் இருந்து ரூ.3,000த்தையும், செல்போனையும் பறித்துக் கொண்டு இதை வெளியில் சொன்னால் விபச்சார வழக்கில் உள்ளே தள்ளி விடுவோம் என மிரட்டி அனுப்பி விட்டனர்.
இது குறித்து ரமணன் தனது உறவினர்களிடம் தெரிவிக்கவே, அதை ரயில்வே ஐ.ஜி. சஞ்சய் அரோராவின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டார் ஐஜி.
இதையடுத்து ஆவடியில் பணிபுரியும் ரயில்வே போலீசாரை வரிசையாக நிற்க வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதில் தன்னிடம் ஆபாசமாக நடந்து கொண்ட மூன்று கேவல காக்கிகளையும் ரமணன் அடையாளம் காட்டினார்.
இதையடுத்து இந்த மூன்று பேர் மீதும் துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் ஐஜி. மூவரும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.
இவர்களை டிஸ்மிஸ் செய்வது தான் ரயில்வேவுக்கு நல்லது. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இதுபோன்ற காக்கிகளிடம் இருந்து பாதுகாப்பில்லை.












Click it and Unblock the Notifications