நக்சல் தாக்குதலில் முன்னாள் முதல்வர் மராண்டி மகன் படுகொலை
கிரித் (ஜார்க்கண்ட்): ஜார்க்கண்ட் மாநிலம் கிரித் மாவட்டத்தில் நடந்த மாவோயிஸ்ட் நக்சலைட் தாக்குதலில் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் அனுப் உள்ளிட்ட 18 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஜார்க்கண்ட் முழுவதும் அதிகபட்ச உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரித் மாவட்டம் சில்காரி கிராமத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. அந்தக் கிராமத்தில் இரவில் நடந்த கலை நிகழ்ச்சியை பெரும் திரளான மக்கள் கூடிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அனுப் மராண்டியும் அவர்களில் ஒருவர்.
அப்போது அங்கு வந்த நக்சலைட்டுகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்கினர்.
இதில் அனுப் மராண்டி உள்ளிட்ட 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 3 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தனர். ஒரு பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
இந்த சம்பவத்தால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது. மாநிலம் முழுவதும் அதிகபட்ச உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நக்சலைட்டுகளைப் பிடிக்க கிரித் மாவட்டம் முழுவதும் தீவிர வேட்டை நடந்து வருகிறது.