ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதிகள் மர்ம சாவு
புளியங்குடி: நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள விஸ்வநாதபேரி பாரதி கீழ மேல் தெருவை சேர்ந்தவர் பூபதிராஜ். இவரது மனைவி சந்தானம். இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். இவர்களுக்கு சரவணன், சுபா என்ற மகனும், மகளும் உள்ளனர். சுபாவுக்கு திருமணமாகி அமெரிக்காவில் வசித்து வருகிறார். சரவணனும் அமெரிக்காவில் கம்யூட்டர் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.
பூபதிராஜாவும், அவரது மனைவி சந்தானமும் கடந்த 24ம் தேதி இரவு வீட்டிற்குள் தூங்க போனவர்கள் கதவை திறக்கவில்லை. அவர்களை பற்றிய எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில் நேற்று காலை முதல் பூபதிராஜா வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் துவங்கியது. இது பற்றி பொதுமக்கள் விஸ்வநாதப்பேரி வி.ஏ.ஓ சமுத்திரம் மற்றும் சிவகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து புளியங்குடி டி.எஸ்.பி மோகன் நவாஸ் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டார். வீட்டில் உள் கதவு திறந்த நிலையிலும் ஆசிரியரின் பைக் வழக்கத்திற்கு மாறாக வீட்டுக்கு உள்புறம் உளள காலியிடத்திலும் நின்றது.
போலீஸார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறை கட்டிலில் பூபதிராஜாவின் மனைவி சந்தானம் வாயில் ரத்தம் கசித்தபடி இறந்து கிடந்தார். பூபதிராஜாவும் வாயில் ரத்தம் கசிந்தபடி தரையில் கவிழ்ந்தாற் போல் இறந்து கிடந்தார்.
பணத்திற்காகவும், நகைக்காகவும் இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர். எனினும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications