அரசு கவிழ்வதும், நீடிப்பதும் காங் கையில் தான் உள்ளது-மார்க்சிஸ்ட்
சென்னை: மத்திய அரசு நீடிப்பதும், கவிழ்வதும் காங்கிரசின் கையில்தான் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும், அக் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினருமான கே.வரதராஜன் கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
அரசியல், பொருளாதாரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போன்றே சமூக கொடுமைகளுக்கு எதிராக போராடுவதிலும் மார்க்சிஸ்ட் முன்னணியில் நிற்கிறது. குறிப்பாக தலித் விடுதலைக்கு கூடுதல் முன்னுரிமை கொடுத்து அகில இந்திய அளவில் போராட்டக் குழு அமைத்து செயல்பட்டு வருகிறோம்.
அதன் ஒரு பகுதியாக மாவட்டவாரியாக கருத்தரங்கு மற்றும் போராட்டங்கள் நடத்த ஆலோசனை செய்து வருகிறோம். வரும் நவம்பர் 2ம் தேதி தமிழகம் முழுவதும் தலித் கொடுமைகளுக்கு எதிராக மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு குறைந்த பட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் தான் இடதுசாரிகள் ஆதரவு அளித்து வருகின்றனர். அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட எந்த ஒப்பந்தம் என்றாலும் எந்த நாடுடனும் விசேஷ உறவு தேவையில்லை என்றே மார்க்கிஸ்ட் கருதுகிறது.
சீனா, ரஷ்யா நாடுகளுக்கும் இது பொருத்தும். அணுசக்தி உடன்பாடு மட்டுமல்லாது எந்த வெளிநாட்டு ஒப்பந்தமானாலும் நாடாளுமன்றத்தில் விவாதித்து தான் முடிவு செய்ய வேண்டும். இதற்காக அரசியல் சட்ட திருத்தம் வேண்டும் என்று வலியுறுத்துவோம்.
அணுசக்தி உடன்பாடு குறித்து அடுத்த கட்டத்தை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசுதான். இந்த அரசு நீடிப்பதும், கவிழ்வதும் காங்கிரஸ் கையில்தான் உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராக இல்லாததால் தான் அணுசக்தி விவகாரத்தில் பின்வாங்கி விட்டதாக சிலர் கூறுகின்றனர்.
அந்த கருத்து உண்மையல்ல. நாங்கள் எப்போதும் கொள்கை அடிப்படையில் தான் முடிவெடுப்போம். எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். எதற்காகவும், யாருக்காகவும் கொள்கையை விட்டு கொடுக்க மாட்டோம்.
பதவிக்காகவோ, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காகவோ அமையும் மூன்றாவது அணி நிலைக்காது. கொள்கை அடிப்படையில் கட்சிகள் ஒன்று சேர்ந்தால்தான் அந்த அணி நிலையாக நிற்க முடியும். தற்போது மூன்றாவது அணி உருவாகக் கூடிய அரசியல் சூழ்நிலை இல்லை. அதற்கான காலம் இன்னும் கனியவில்லை.
விவசாயிகள் நலனுக்காக எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் ஒப்பந்த அடிப்படையிலான முறைகளை கைவிடவேண்டும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் வற்புறுத்துதலின் பேரில் இந்த ஒப்பந்த விவசாய முறை கொண்டு வரப்பட்டுள்ளது என்றார் வரதராஜன்.












Click it and Unblock the Notifications