நாகையில் கடல் நீர் வீடுகளில் புகுந்தது!
நாகை: நாகை மாவட்டத்தில் கன மழை மற்றும் பேய்க் காற்றால் ராட்சத அலைகள் எழும்பி கடலோரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டப் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை அளவு கூடுதலாக உள்ளது, மேலும் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்டத்தின் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னம் காரணமாக கடல் அலைகள் கடும் சீற்றத்தில் உள்ளது. இதனால் கடல் அலைகள் சுமார் பல அடி உயரம் வரை எழும்புகின்றன. கொள்ளிடம் அருகே கடல் அலைகள் ராட்சத அளவில் எழுந்து ஊருக்குள் நீர் புகுந்தது.
இதனால் அந்த பகுதியில் இருந்த 150 வீடுகள் கடல் நீரில் மிதக்கின்றன. பலரது வீடுகள் கடல் நீர் புகுந்ததில் இடிந்து விட்டன. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் அந்த பகுதியில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.