முசிறி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வருமான வரி சோதனை!
திருச்சி: முசிறியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இன்று வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் முசிறியில் வருவாய் கோட்டாட்சியராக அருணாச்சலம் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இதற்கு முன்பு திருவள்ளூரில் வேலை பார்த்து வந்த இவர் முசிறிக்கு மாற்றலாகி வந்து 9 மாதங்கள் தான் ஆகிறது.
அருணாச்சலம் ஏகத்துக்கும் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து வந்த புகாரையடுத்து முசிறி, திருத்தணியில் உள்ள அருணாச்சலத்தின் வீட்டிலும், சித்தூரில் உள்ள அவருடைய பங்களாவிலும் ஒரே நேரத்தில் இன்று வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
அவர் பணிபுரியும் ஆர்.டி.ஓ அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
முசிறியில் உள்ள அருணாசலத்தின் வீட்டில் இருந்து ரூ. 1.25 லட்சம் ரொக்கம் மற்றும் பல சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக தொடர்ந்து அருணாச்சலத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாத வருமானம் ரூ. 13,000 கொண்ட அருணாச்சலத்திடம் ரூ. 60 லட்சத்துக்கும் மேல் சொத்து உள்ளதாகக் கூறப்படுகிறது.