ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு தலைவராகிறார் ஆர்.என்.சவானி
சென்னை: கூடுதல் டிஜிபி பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெறும் ஆர்.என்.சவானி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின், ஊழல் தடுப்புப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
தமிழக டிஜிபி அலுவலகத்தில் தலைமையக கூடுதல் டிஜிபியாக இருந்தவர் ஆர்.என்.சவானி. மிகவும் நேர்மையான அதிகாரியான சவானி, தமிழக பிரிவு ஐபிஎஸ். அதிகாரி ஆவார்.
திருவண்ணாமலையில் கூடுதல் எஸ்.பியாக 1980ம் ஆண்டு தனது காவல் பணியைத் தொடங்கியவர். அதன் பின்னர் பல்வேறு ஊர்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள சவானி, கடைசியாக தலைமையக கூடுதல் டிஜிபியாக இருந்து வந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பிரிவு தலைமை அதிகாரியாகவும் சவானி பணியாற்றியுள்ளார்.
இடையில் சிபிஐ இணை இயக்குநர் பதவியை வகித்தார். அந்த சமயத்தில்தான் இந்திய கிரிக்கெட் உலகை ஸ்தம்பிக்க வைத்த கிரிக்கெட் சூதாட்டம் குறித்த திடுக்கிடும் தகவல்களை வெளிக் கொணர்ந்தது சிபிஐ. அசாருதின், மனோஜ் பிரபாகர், அஜய் ஜடேஜா உள்ளிட்ட இந்திய ஸ்டார் வீரர்கள் பலர் ஆதாரங்களுடன் சிக்கினர்.
சவானி குழுவினரின் அதிரடி விசாரணையால்தான் அசாருதீன் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட முடியாமல் தடை விதிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
அதன் பின்னர் தென் மண்டல சிபிஐ தலைமைப் பொறுப்பையும் சவானி செயல்பட்டார்.
இதையடுத்து சவானியை, தங்களது ஊழல் தடுப்புப் பிரிவு தலைமைப் பொறுப்பை ஏற்க வருமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்தது. இருப்பினும் சவானி தமிழக காவல் பணியிலேயே நீடிக்க விரும்பியதால் அந்தப் பொறுப்பை ஏற்கவில்லை.
இந்த நிலையில் அவரை முக்கியப் பொறுப்பு இல்லாத பதவியில் அரசு வைத்திருந்ததால் விருப்ப ஓய்வு பெற முடிவு செய்தார் சவானி. இதையடுத்து விருப்ப ஓய்வுக்கு அவர் விண்ணப்பித்தார். ஆனால் அது ஏற்கப்படாமல் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.
சமீபத்தில்தான் சவானியின் விருப்ப ஓய்வு ஏற்கப்பட்டு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து இன்றுடன் சவானி தனது பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுகிறார்.
பதவியிலிருந்து ஓய்வு பெறும் சவானி, அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின், ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார். இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமையகத்தில் சவானி பணியாற்றுவார். உலக அளவில் கிரிக்கெட் போட்டிகளில் நடைபெறும் சூதாட்டங்களைக் கண்டுபிடிப்பது, வீரர்கள் மீதான சூதாட்ட புகார் உள்ளிட்டவற்றைக் கவனிக்கும் பொறுப்பு சவானிக்கு வழங்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications