கலிபோர்னியா: காட்டுக்கு தீ வைத்த சிறுவன்
லாஸ் ஏஞ்சலெஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகருக்கு அருகே காட்டுத் தீயில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலம் நாசமானதற்கும், அந்தத் தீ கலிபோர்னியாவுக்குப் பரவியதற்கும் ஒரு சிறுவன்தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
அந்த சிறுவனின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அந்த சிறுவனக்கு 13 வயதுக்குள்தான் இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது.
கடந்த 22ம் தேதி லாஸ் ஏஞ்செலஸ் அருகே உள்ள சான்டா கிளாரிடா பகுதியில் காட்டுத் தீயினால் 38 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நாசமாகின. 63க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தன. இதற்கு இந்த சிறுவன்தான் காரணமாம்.
இந்த சிறுவன் காட்டுப் பகுதியில் தீக்குச்சிகளை வைத்து விளையாடியுள்ளான். அப்போதுதான் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில்தான் இத்தனை நாசம் ஏற்பட்டு விட்டதாக லாஸ் ஏஞ்சலெஸ் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஸ்டீவ் விட்மோர் கூறியுள்ளார்.
முதலில் மின்சாரக் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் இதற்கு சிறுவன்தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. அந்த சிறுவனை தற்போது போலீஸார் விசாரணைக்குப் பின் திருப்பி அனுப்பி விட்டனர். அவன் மீது வழக்கு தொடருவதா, வேண்டாமா என்று சட்ட நிபுணர்களின் கருத்தை போலீஸார் கேட்டுள்ளனராம்.
இங்கு பிடித்த தீதான், கடந்த வாரம் கலிபோர்னியா காட்டுப் பகுதிக்குப் பரவி 2300க்கும் மேற்பட்ட கட்டடங்களை சேதப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 78 பேர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications