ராமர் பாலம்-தேசிய சின்னமாக்க சு.சுவாமி கோரிக்கை
சென்னை:ராமர் பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று சேது சமுத்திர திட்ட ஆய்வுக் குழுவிடம் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஆராய பேராசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் சேது சமுத்திரக் கமிட்டியை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்தக் குழுவின் தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் ராமருக்கும், ராமர் பாலத்திற்கும் எதிரான கருத்தைக் கொண்டவர்கள் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் சுவாமி வழக்கு தொடர்ந்தார். கமிட்டியைக் கலைக்கக் கோரியிருந்தார். ஆனால் இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இந்த நிலையில், சேது சமுத்திரக் குழுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளார் சுவாமி.
அதில் ராமர் பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும். இதுகுறித்து சேது சமுத்திரக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தை மண்டபம் பகுதி வழியாக மாற்றுப் பாதையில் நிறைவேற்ற முயற்சிக்கலாம்.
சேது சமுத்திரக் கமிட்டியில் இடம் பெற்றிருக்கும் உறுப்பினர்கள், இந்த விவகாரம் தொடர்பான தங்களது முந்தையைக் கருத்துக்களை கைவிட்டு விட்டு, ராமர் பாலத்தை அழிக்கும் வகையிலான தற்போதையை திட்டத்தை கைவிட மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும். மாற்று வழியில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும்.
மண்டபம் வழியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது இயலாத காரியம் என கமிட்டி கருதுமானால், பேசாமல் இந்தத் திட்டத்தையை கைவிட்டு விட வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.
ராமர் பாலத்திற்கு ஊறு ஏற்படுவதை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை குழுவினர் உணர வேண்டும். எனவே இந்த பகுதியை தேசிய சின்னமாக அறிவிப்பது மட்டுமே ராமர் பாலம் குறித்த மக்களின் உணர்வுகளை மதிக்கும் செயலாக இருக்க முடியும். தேசியச் சின்னமாக மட்டுமல்லாமல் உலக பாரம்பரியச் சின்னத்தின் வரிசையிலும் இதை சேர்க்க மத்திய அரசுக்கு சேது கமிட்டி பரிந்துரைக்க வேண்டும் என்று சேது கமிட்டியிடம் சுவாமி கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications