சென்னை விமான நிலையத்தில் போதை மருந்து பறிமுதல்
சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாங்காக்கிற்கு கடத்தப்படவிருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதை மருந்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேவியர் என்பவர் பாங்காக் செல்வதற்காக சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையம் வந்தார். அவர் சுங்கஇலாகா அதிகாரிகளின் சோதனை முடிந்து விமானத்திற்குள் சென்று அமர்ந்துள்ளார்.
விமானம் புறப்பட சிறிது நேரம் இருக்கும் போது பாங்காக் செல்லவிருக்கும் பயணி ஒருவர் போதை மருந்து கடத்தி செல்லவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து புறப்பட சில நிமிடங்களே இருந்த பாங்காக் செல்லும் விமானத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையிட்ட போது சேவியர் என்பவரிடம் இருந்து 5 பாக்கெட்டுகள் போதை பொருளை கைப்பற்றி அவரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதை மருந்தின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.30 லட்சம் ஆகும். இந்த திடீர் சோதனையால் பாங்காக் செல்லவிருந்த விமானம் சிறிது தாமதம் ஆனது.