For Daily Alerts
Just In
நைஜீரிய தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட தமிழர்கள் இன்று வருகை
திருநெல்வேலி: நைஜீரியா நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நெல்லை வாலிபர்கள் விமானம் முலம் இன்று நாடு திரும்புகின்றனர்.நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள வடக்கான்குளத்தை சேர்ந்தவர்கள் அஜீத், வினோத், மோகன்தாஸ். இவர்கள் மூவரும் நைஜீரியாவில் உள்ள இத்தாலிய நாட்டு ஆயில் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் கடந்த 26ம் தேதி நடுக்கடலில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது அங்கு வந்த தீவிரவாத கும்பல் அஜீத், வினோத், மோகன்தாஸ் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த டாரி போலாந்து நாட்டை சேர்ந்த மைக்கிள் கானோ பாக்கி, ஜான் ஜோசப் ஆகிய 6 பேரையும் கடத்தி சென்றனர்.
கடத்தப்பட்ட ஊழியர்களை மீட்பது குறித்து தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த அங்குள்ள ஒரு அமைப்பினர் (இடைத்தரகர்கள்) களம் இறங்கினர். அவர்கள் தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி கடத்தப்பட்ட ஊழியர்களை மீட்டு வந்தனர்.
இந்திய நேரப்படி நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தீவிரவாதிகள் போர்ட்ஹார்கோரட் என்ற இடத்தில் கடத்தப்பட்டவர்களை விடுதலை செய்தனர். தாங்கள் விடுதலை செய்யப்பட்டது குறித்து அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவர்கள் இன்று காலை விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு இரவு 8-30 மணிக்கு வருகின்றனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கார் மூலம் சொந்த ஊரான வடக்கான்குளத்திற்கு இரவு 11-30 மணிக்கு வருகின்றனர்.
தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட இந்த மூவரின் உறவினர்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும் அவர்களை வரவேற்பதில் சந்தோஷமாகவும் காணப்படுகின்றனர்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 20:56 [IST]